கொலைகாரர்கள், கொள்ளையர்களாக மாறிவரும் கல்லூரி மாணவர்கள்... ஒர் அதிர்ச்சி ரிப்போர்ட்
கோவை: இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு புகழ்பெற்ற கோவை நகரில், இன்ஜினியரிங் மாணவர்களே கொலை, கொள்ளைகளில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது கல்வியாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
"இன்ஜினியரிங் சீட் வேணுமா.... இன்ஜினியரிங் சீட்' என்று இலந்தை பழத்தை போல கூவி விற்கப்படும் பொறியியல் படிப்புகளுக்கு சமூகத்தில் அந்தஸ்து இல்லாமல் போனது இதற்கான முக்கிய காரணம்.
பீர் பாட்டிலால் மாணவர் கொலை
கோவை புருக்பாண்ட் ரோடு ரயில்வே பாதை அருகே, பீர் பாட்டில்களால் குத்தப்பட்டு கிடந்தது 21 வயது வாலிபர் சடலம். போலீசாரின் விசாரணையில் கொலையானவர் திருப்பூரை சேர்ந்த அர்னால்டு என்பது தெரியவந்தது. சூலூர் ஆர்.வி.எஸ் கல்லூரியில் இறுதியாண்டு பி.சி.ஏ படிக்கும் மாணவர் என்பது போலீசாருக்கு மேலும் அதிர்ச்சியான தகவலாக அமைந்தது.
கிரிமினல்களாகும் மாணவர்கள்
படிக்கும் வயதில் பகையை சம்பாதிக்கும் அளவுக்கு அர்னால்டு வாழ்க்கையில், என்ன நடந்திருக்கும்? இந்த கேள்விக்கு விடை, மாணவர்களுக்கும், கிரிமினல்களுக்குமான தொடர்பு அதிகரித்துள்ளது என்பதுதான். கிரிமினல்களின் சகவாசம் கோவை மாணவர்கள் உயிரை கொஞ்சம், கொஞ்சமாக குடித்து வருகிறது.
கல்லூரி முதல்வரையே விடவில்லை
கோவையில் கல்லூரி மாணவர்கள் எந்த அளவுக்கு திரைப்படத்தில் காணப்படும் கிரிமினல்களை போல நடந்துகொள்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக, நெஞ்சை கனமாக்கும் சம்பவம் ஒன்று, ஜூலை 24ம்தேதி நடந்தது. ஆர்.வி.எஸ். ஆயுர்வேதா கல்லூரி முதல்வர் பி.டி.சாக்கோ. கோவை, ராமநாதபுரம் பகுதியில் வசிக்கிறார். அவரது வீட்டுக்குள் புகுந்த மாணவ 'செல்வங்கள்', கார் மற்றும் பைக்குளை பெட்ரோல் ஊற்றி எரிந்துவிட்டு 'ஹாயாக' சென்றனர். காரணம், தவறான நடத்தை கொண்ட நான்கு மாணவர்களை அவர் தண்டித்துவிட்டாராம்.
பெண்ணை கட்டிப்போட்டு
ஜூலை 22ம்தேதி கோவை இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களின் மற்றொரு கோர முகம் வெளிப்பட்ட நாள். இறுதியாண்டு எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிக்கும் ஹரீஷ், மணிகண்டன், புவனேஸ்வரன் ஆகியோர் பெண்மணி ஒருவரை அடித்து, கைகளை கட்டிப்போட்டு, நகைகளை பறித்துக் கொண்டு தப்பியோடினர். போலீசார் பிடித்து விசாரித்தபோது, ஆடம்பர வாழ்க்கைக்காக அப்படி செய்ததாக 'கூலாக' கூறினர் வருங்கால இந்தியாவின் தூண்கள்.
ஹாஸ்டல் சகவாசம் சரியில்லை
கல்வியாளர் சிவகுமார் இதுபற்றி கூறுகையில் "வெளியூரில் இருந்து கோவைக்கு கல்வி கற்க அதிக மாணவர்கள் வருகிறார்கள். அவர்கள் கல்வி நிலையத்துக்கு வெளியே உள்ள விடுதிகளில் தங்கும்போது, கிரிமினல்களுடன் பழக்கம் ஏற்படுகிறது. போதை மற்றும் மது பழக்கத்துக்கு அடிமைகளாகிவிடுவதால், அதை வாங்க தேவைப்படும் பணத்துக்காக கொலை, கொள்ளைகளில் இறங்குகின்றனர்" என்றார்.
சேர்ந்தா மட்டும் போதும்...
இன்ஜினியரிங் கல்லூரிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளதால் அவற்றில் சேர மாணவர்கள் கிடைப்பதே குதிரை கொம்பாகிவிட்டது. இதனால், மாணவர்களின் பின்புலம் குறித்து கல்லூரிகள் கவலைப்படாமல் சீட் கொடுக்கின்றன. இதுவும் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கிரிமினல்களாக மாற காரணமாகிவிட்டது என்று கூறுகிறார் மற்றொரு மூத்த கல்வியாளர்.