கோவை: ஹெச்ஐவியைக் காரணம் காட்டி நீக்கப்பட்ட மாணவி மீண்டும் பள்ளியில் சேர்ப்பு
கோவை: ஹெச்ஐவி தாக்குதலால் பாதிக்கப் பட்டுள்ளதாகக் கூறியில், கோவையில் மாணவி ஒருவரை பள்ளி நிர்வாகம் சேர்க்க மறுத்ததால் சர்ச்சை ஏற்பட்டது. பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் தலையீட்டின் பேரில் அம்மாணவி சேர்த்துக் கொள்ளப் பட்டுள்ளார்.
பொள்ளாச்சியை சேர்ந்த சம்பந்தப்பட்ட அந்த மாணவியின் பெற்றோர் சமீபத்தில் ஹெச்ஐவி நோய் பாதிப்பால் உயிரிழந்தனர். அதனையடுத்து தனது பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்து வந்துள்ளார் அம்மாணவி.
இந்நிலையில், பாட்டிக்கும் உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால் கோவையில் உள்ள தனியார் தொண்டு அமைப்பின் விடுதியில் தங்க வைக்கப் பட்ட அம்மாணவி, அருகிலிருந்த அரசு உதவி பெரும் பள்ளியில் பத்தாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார்
முதலில் மாணவியைச் சேர்த்துக் கொண்டது பள்ளி நிர்வாகம். பின்னர் பெற்றோருக்கு இருந்ததைப் போலவே மாணவிக்கும் ஹெச்ஐவி தாக்குதல் இருப்பதை தெரிந்து கொண்டது. தொடுவது, பேசுவது போன்ற முறைகளில் ஹெச்ஐவி நோய்க் கிருமி பரவாது, அது தொற்றுநோயல்ல ரத்தத்தின் மூலம் பரவுவது' என மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய பள்ளியே நேற்று மாணவியை வெளியே அனுப்பியது.
ஹெச்ஐவி பாதிக்கப் பட்ட மாணவியை பள்ளி நிர்வாகம் வெளியேற்றிய செய்தி நேற்று காட்டுத்தீ போல ஊடகங்களில் பரவியது. சர்ச்சையை உண்டாக்கிய இந்த சம்பவத்தில் உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டது.
அதனைத் தொடர்ந்து மீண்டும் அதே பள்ளியில் அம்மாணவி சேர்த்துக் கொள்ளப் பட்டுள்ளார்.