கோவை: 3 கடைகளில் கொள்ளை… போலீசை கண்டித்து சாலைமறியல்
கோவை: கோவையில் துணிக்கடையில் கொள்ளையடித்துவிட்டு தீவைத்துச் சென்ற திருடர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையையடுத்த மாதம்பட்டியில், செல்போன் கடை, சைக்கிள் கடை மற்றும் துணிக்கடைகளில் இன்று அதிகாலையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த கடைகளுக்கு கொள்ளையர்கள் தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவங்கள் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால், ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள், காவல் துறையினரை கண்டித்து இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சாலை மறியல் குறித்து பொதுமக்கள் கூறுகையில், ''மாதம்பட்டி பகுதி ஆலந்துறை காவல் நிலையத்திற்கும் பேரூர் செட்டிபாளையம் காவல் நிலையத்திற்கும் இடையே வருகிறது. எல்லைப் பிரச்னையில் எந்த போலீசாரும் இரவு ரோந்து வருவதில்லை. மேலும், நாங்கள் புகார் தெரிவிக்க சென்றால் எங்களுடைய எல்லையில்லை என்று இரண்டு காவல் நிலைய அதிகாரிகளும் திருப்பி அனுப்புவது தொடர்கிறது. இந்த பிரச்னையை உடனடியாக போக்கவும், இன்று நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம்"
இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியல் செய்யும் தகவல் அறிந்த பேரூர் செட்டிபாளையம் போலீசார், அங்கு விரைந்து வந்து பொதுமக்க்ளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.












Click it and Unblock the Notifications