நீட் தேர்வோடு +1 பொதுத்தேர்வையும் ரத்து பண்ணுங்க.. கோவையில் பள்ளி மாணவிகள் போர்க்கொடி!
நீட் தேர்வோடு பிளஸ் 1 பொதுத்தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி கோவை வெள்ளலூரில் அரசுப் பள்ளி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கோவை மாவட்டம் வெள்ளலூரில் அரசுப் பள்ளி மாணவிகள் காலாண்டுத் தேர்வை புறப்பணித்து நீட் தேர்வுக்கு தடை கோரியும் பிளஸ் 1 பொதுத் தேர்வை தடை செய்ய வலியுறுத்தியும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாணவி அனிதா போல தங்களின் கல்விக் கனவும் நசுங்கிவிடக் கூடாது என்பதற்காக நீட் தேர்விற்கு தடை கோரி கடந்த சனிக்கிழமை சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை என்று மாணவிகள் சுமார் 2 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பின்னர் மாவட்ட கல்வி அதிகாரி மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கலைந்து சென்றனர். இந்நிலையில் கோவை வெள்ளலூரில் உள்ள அரசுப் பள்ளி மாணவிகள் இன்று காலையில் காலாண்டுத் தேர்வை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதோடு பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து 3 பொதுத்தேர்வுகளை சந்திப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாவதாக மாணவிகள் கூறினர். பள்ளிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.