சென்னையில் தொடர்ந்து எரியும் வாகனங்கள்: நடு ரோட்டில் கல்லூரி பேருந்து திடீரென தீப்பிடித்தது
சென்னை: தனியார் கல்லூரிக்கு சொந்தமான பேருந்து ஒன்று இன்று காலையில் கிண்டி அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் இருந்த மாணவர்கள் வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
காட்டாங்குளத்தூரில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு படிக்கக்கூடிய மாணவர்கள் மந்தைவெளியில் இருந்து காட்டாங்குளத்தூருக்கு கல்லூரி பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.

கிண்டி வழியாக சர்தார்பேட்டை சாலையில் வரும்போது திடீரென பேருந்தின் முன் பக்கத்தில் இருந்து புகை வெளிவந்தது. உடனடியாக ஓட்டுநர் வினோத் என்பவர் பேருந்தின் வேகத்தை குறைத்து பேருந்தை ஓரமாக நிறுத்தினர். அந்த பேருந்தில் மொத்தமுள்ள 38 மாணவ, மாணவிகளை உடனடியாக வெளியேற்றினார். மாணவ, மாணவிகள் அவசரஅவசரமாக வெளியேறிய அடுத்த நிமிடமே பேருந்து மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். கிட்டத்தட்ட 50 சதவீதத்திற்கும் மேலாக பேருந்து எரிந்து நாசமானது. பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியமான செயலால் மாணவர்கள் உயிர் தப்பினர்.
தனியார் பல்கலைக்கழக கல்லூரி பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடுரோட்டில் பேருந்து கொளுந்து விட்டு எரிந்த காரணத்தால் கிண்டி அருகே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் கொளுத்தும் வெயில் காரணமாக நடுசாலையில் ஓடும் கார்கள் அடிக்கடி தீப்பிடித்து எரிகின்றன. இப்போது காலை நேரத்திலேயே பேருந்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications