கல்லூரி ஆசிரியை கழுத்தை அறுத்து, தீவைத்து எரித்துக் கொலை.. ஒரு தலைக் காதல் காரணமா?
கோவை அருகே கல்லூரி பேராசிரியை ஒருவர் கழுத்தை அறுத்தும் தீயிட்டு எரித்தும் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை அருகே 4 வயது மகனுடன் வீட்டில் தனியாக வசித்து வந்த பேராசிரியை மர்ம நபர்களால் கழுத்தை அறுத்தும் தீயிட்டும் கொளுத்தப்பட்டுள்ளார். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை மாவட்டம் இருகூர் ஐ.ஓ.பி. காலனியைச் சேர்ந்தவர் சிவலிங்கம் . பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லதா திருப்பூரில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் பேராசியராக பணியாற்றி வந்தார்.

இவர்களுக்கு 4 வயதில் சத்தியபிரபு என்ற மகன் உள்ளார். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் கடந்த ஓராண்டாக பிரிந்து தனித்தனியாக வசித்து வந்தனர். லதா கோவையில் தனது மகனுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் லதா வெளியே வராததால் சந்தேகமடைந்த பக்கத்துவீட்டுப் பெண் ராணி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதைக் கண்டு உள்ளே சென்று பார்த்தார்.
புகைந்து கொண்டிருந்த உடல்
வீட்டின் படுக்கை அறையில் லதா தீவைத்து எரிக்கப்பட்டு அவரது உடல் புகைந்து கொண்டிருப்பதைக் கண்ட ராணி கத்தி கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு திரண்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஓடிய மோப்ப நாய்
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த கோவை மாநகர காவல்துறை துணை கமிசனர் லட்சுமி, உதவி கமிஷனர் சுந்தர்ராஜ் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தினர். இதில் லதா கழுத்து அறுக்கப்பட்டு, தீ வைத்து கொளுத்தப்பட்டடது தெரிய வந்துள்ளது. போலீசார் கொண்டு வந்த ராஜா என்ற மோப்ப நாய் கொஞ்ச தூரம் ஓடிச் சென்று நின்றுவிட்டது.
பொருட்கள் மாயமாகவில்லை
லதா கழுத்தில் அணிந்து இருந்த நகையை மட்டும் மாயமாகியுள்ளது. வீட்டில் உள்ள மற்றப்பொருட்கள் ஏதும் கொள்ளை போகவில்லை. எனவே கொள்ளைக்காக கொலை நடைபெறவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
செல்போனில் பேசியவர்கள் யார்?
லதா 3 பேரிடம் செல்போனில் பேசியதாக தெரிகிறது. அவர்கள் யார் என்பது குறித்து விசாரிக்கவும் கொலைக்கும் அவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரிக்கவும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ஒருதலைக் காதல் காரணமா?
சிவலிங்கத்தின் சித்தப்பா மகன் சதீஷ், கணவனை பிரிந்து வாழும் லதாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் பேராசிரியை லதா கொல்லப்பட்டரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் பேராசிரியை ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications