நடிகர் ராம்கியால் உயிருக்கு ஆபத்து: ஈரோடு எஸ்.பி.,யிடம் புகார் கொடுத்த கல்லூரி மாணவி
ஈரோடு: நடிகர் ராம்கியால் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி, காதல் திருமணம் செய்து கொண்ட கல்லூரி மாணவி ஒருவர் ஈரோடு எஸ்.பி.,யிடம் புகார் மனு கொடுத்துள்ளார். காதல் திருமணம் செய்து கொண்டது, என் குடும்பத்தாருக்கும், என் தாய் மாமாவும், நடிகருமான ராம்கிக்கும் பிடிக்கவில்லை. இதனால் எனக்கும், கணவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர் மாவட்டம், அரக்கோணம், பழனிபேட்டை குருசாமி வீதியை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மகள் ஸ்மிர்த்தி, 19. இவர், ஈரோடு எஸ்.பி., அலுவலகத்துக்கு, நேற்று தனது கணவர் வெங்கடேசுடன் வந்து, புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அதில், நான், பி.இ. படித்து வருகிறேன். கடந்த, 11 மாத காலமாக, ஜிம் பயிற்சியாளரும், ஓட்டல் ஊழியருமான வெங்கடேஷை காதலித்தேன். உடற்பயிற்சிக்கு சென்ற போது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இது பெற்றோருக்குத் தெரிய வரவே எதிர்ப்பு கிளம்பியது. கடந்த, 18ம் தேதி வீட்டில் இருந்து காலையில் கல்லூரிக்கு சென்றேன். அன்று மாலை, காதலருடன் கிளம்பி வந்துவிட்டேன். எனது வீட்டில் இருந்து வரும் போது நகையோ, பணமோ எடுத்து வரவில்லை. இருவரும், ஈரோடு பெரியார் மன்றத்தில் சுய மரியாதை திருமணம் செய்து கொண்டோம். அதை சார்பதிவாளர் அலுவலகத்தில் முறையாக பதிவும் செய்துள்ளோம்.
நான் திருமணம் செய்து கொண்டது, என் குடும்பத்தாருக்கும், என் தாய் மாமாவும், நடிகருமான ராம்கிக்கும் பிடிக்கவில்லை. இதனால் எனக்கும், கணவர் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஸ்மிர்த்தி கூறியுள்ளார். இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.