குண்டாறு நீர்தேக்கத்தில் மூழ்கி கல்லூரி மாணவன் பலி – உடலை தேடும் பணி தீவிரம்
திருநெல்வேலி: குற்றாலத்திற்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவன் குண்டாறு அணையில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவனின் உடலை இரண்டு நாட்களாக தேடி வருகின்றனர்.

உயிரிழந்த மாணவனின் பெயர் சதீஷ் என்பதாகும். கோவில்பட்டியைச் சேர்ந்த சதீஷ் சிவகாசி கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளதால், தனது நண்பர்கள் 4 பேருடன் குற்றாலம் சென்று விட்டு குண்டாறு அணைக்கு சென்றனர். அங்கு ஆழமான பகுதியில் நீந்தி சென்றுள்ளனர். இதில் சதீஷ் நீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசாரும் தீயணைப்பு துறையினரும்,நேற்று தேடியும் உடல் கிடைக்கவில்லை. இரண்டாவது நாளாக இன்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். குண்டாறுப் பகுதியில் அடிக்கடி மழை பெய்வதால் தேடுதல் வேட்டையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
குற்றாலத்தில் சீசன் களைக்கட்டியுள்ளதால் நாடெங்கிலும் இருந்து எராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தில் கடந்த இரு தினங்களாக குவிந்து வருகின்றனர். இங்குள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டினாலும், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அருகிலுள்ள கேரள மாநிலம் ஆரியங்காவு பாலருவி,அச்சன்கோவில் மணலாறு,செங்கோட்டை குண்டாறு உள்ளிட்ட பகுதிகளை நோக்கி படையெடுக்கின்றனர்.

அதிகாலை முதலே குற்றால அருவிகளில் குளியலை முடித்து பிற அருவிகளை நோக்கி செல்லும் சுற்றுலாப் பயணிகள் குண்டாறு நீர்த்தேக்கம் பகுதியில் திரண்டுள்ளதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அணைப் பகுதியில் படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதால் உற்சாகமாக பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அணையில் மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவனுடன் வந்த நண்பர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையினருக்கு போதிய உபகரணங்கள் வழங்காததால் மாணவனின் உடலை கண்டுபிடிக்க தாமதமாகி வருகிறது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவனின் உடலை மீட்டுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications