பஸ் கட்டண உயர்வை வாபஸ் வாங்கு: 2வது நாளாக தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம்
பஸ் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Recommended Video
சென்னை: உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை திரும்ப பெறக்கோரியும் அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கல்லூரி வகுப்புகளை புறக்கணித்து மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் பஸ் கட்டணம் கடந்த சனிக்கிழமை முதல் இரு மடங்கு வரை உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட ஏழை, நடுத்தர மக்கள் அரசு பஸ்களை சிறைபிடிப்பது, மறியல் செய்வது உள்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசுக்கு எதிராக முழக்கம்
தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு பெண்கள் கல்லூரி மாணவிகள் 2வது நாளாக வகுப்புகளை புறக்கணித்துள்ளனர். ஆயிரக்கணக்கான மாணவிகள் கல்லூரி நுழைவாயிலில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். கல்விக்கட்டணம் கட்டவே சிரமமாக இருப்பதால் பஸ் கட்டணம் பெரும் சுமையாக இருப்பதாக மாணவிகள் கூறியுள்ளனர்.
கட்டண கொள்ளை
கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வாபஸ் வாங்கு... வாபஸ் வாங்கு.... கொள்ளையடிக்காதே என்று மாணவ, மாணவிகள் அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். ஏழ்மையான சூழ்நிலையில் கிராமத்தில் இருந்து வந்து படித்து வருவதாக கூறினர்.
மாணவர்கள் ஆர்பாட்டம்
நாகை மாவட்டம் பொறையார் டிபிஎம்எல் கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி வாசலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதுக்கோட்டை அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராஜபாளையத்திலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராஜபாளையம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தை சிறைப்பிடித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்கள் போராட்டம் தீவிரம்
ஜல்லிக்கட்டு போராட்டம் போல பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெறும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும் மாணவர்கள் கூறியுள்ளனர்.