கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி விரைவில் தொடக்கம்: விஞ்ஞானி தகவல்
கன்னியாகுமரி: கூடங்குளம் அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்று 11 நாடுகளைச் சேர்ந்த அணு விஞ்ஞானிகள் பாராட்டினர். இதனையடுத்து வர்த்தக ரீதியிலான உற்பத்தி தொடங்கும் போது திட்டமிடப்பட்டுள்ள 1000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறும் என்று அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பஜாஜ் தெரிவித்துள்ளார்.
அழுத்த மின்னீர் அணு உலை பாதுகாப்பு குறித்த சர்வதேச கருத்தரங்கு குமரியில்,3 நாட்கள் நடந்தது. இந்த கருத்தரங்கில் சீனா, ஈரான், ரஷ்யா, உக்ரைன் மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 14 அணுசக்தி விஞ்ஞானிகள் பங்கேற்று அணுஉலை குறித்து விவாதித்தனர். இந்த கருத்தரங்கு நேற்று நிறைவுபெற்றது.

கருத்தரங்கு குறித்து இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பஜாஜ் செய்தியாளாகளிடம் பேசியதாவது:
கருத்தரங்கில் புகுஷிமா அணு உலை விபத்திற்கு பின்னால் அணு உலையின் பாதுகாப்பு, தரமேம்பாடுகள், நவீன தொழில்நுட்பம், போன்றவற்றை ஆய்வு செய்யும் நோக்கத்தில் இந்தியாவில் முதன் முறையாக கன்னியாகுமரியில் இந்த கூட்டம் நடந்தது.
உலகில் இயங்குகிற அணு உலை வரிசையில் கூடங்குளம் அணு உலை அதிநவீன உபகரணங்களைக் கொண்டது என்பதால் இந்த குழுவினர் அதை முழுமையாக ஆய்வு செய்து மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்று திருப்தியடைந்து பாராட்டினர்.
கூடங்குளத்தில் தற்போது சோதனை அடிப்படையில் மின் உற்பத்தி நடந்து வருகிறது. வர்த்தக ரீதியிலான உற்பத்தி தொடங்கும் போது திட்டமிடப்பட்டுள்ள 1000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறும்.
கூடங்குளம் அணுமின் நிலைய கழிவுகளை மறுசுழற்சி செய்யும் திட்டம் தற்போது இல்லை. 3 மற்றும் 4வது அணுஉலை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications