காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ராஜினாமா?

இலங்கையில் இம்மாதம் 15-ந் தேதி காமன்வெல்த் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பது தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் வலியுறுத்தல்.
இம்மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்தும் உள்ளார். இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு மத்திய அமைச்சரவையிலேயே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சியில் ஒரு பிரிவினர் இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், பிரதமர் மன்மோகன்சிங்கை நேற்று நேரில் சந்தித்தும் வலியுறுத்தி இருந்தார்.
இருப்பினும் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ள காங்கிரஸ் உயர்நிலைக் குழு அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அப்படி பிரதமர் மன்மோகன்சிங் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்டால் தமது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய ஜி.கே.வாசன் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக நாளை சென்னையில் தமது ஆதரவாளர்களுடன் ஜி.கே.வாசன் ஆலோசனை நடத்த திட்டமிட்டிருக்கிறார். மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தால் அனேகமாக காங்கிரஸ் கட்சியை விட்டும் வெளியேறி மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸை ஜி.கே.வாசன் தொடங்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications