இரு பிரிவினரிடையே மோதல்- கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்கள் புகார்
இரண்டு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதால் நெல்லை மாவட்டத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை: ஆலங்குளம் அருகே இரு சமுதாயத்தினர் இடையே நடந்து வரும் மோதல் தொடர்பாக, நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
நெல்லை மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ளது கிடாரக்குளம் கிராமம். இங்கு இரு சமுதாயத்தைச் சேர்ந்த மக்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் இரு பிரிவினரும் புகார் செய்தததின் பேரில் விசாரணை நடந்து இரு பிரிவினரையும் சமாதானப்படுத்தி வந்தனர்.

ஆனால் தற்காலிகமாக அவர்கள் மோதலை கைவிட்டாலும் அவ்வப்போது மோதி கொள்வது வாடிக்கையாகி உள்ளது. இதனால் கிடாரக்குளம் கிராமத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில் கிடாரக்குளம் மற்றும் அகரம் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் மாலை நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். அந்த மனுவில், கடந்த மே 25ம் தேதி காலை 11 மணிக்கு எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த 2 பேரை மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கட்டி வைத்து அடித்துள்ளனர்.
மேலும் அகரத்தை சேர்ந்த சுந்தர், மணிகண்டன் ஆகியோரை கிடாரக்குளத்தைச் சேர்ந்த சிலர் கடுமையாகத் தாக்கினர். எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை கொலை செய்து விடுவதாக அடிக்கடி அந்த மாற்றுச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மிரட்டி வருகின்றனர்.
எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவால் கலெக்டர் அலுவலகததில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிடாரக்குளம் பகுதியில் போலீஸ் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications