ஆடிட்டர் குருமூர்த்தியை அவதூறாக பேசியதாக நாஞ்சில் சம்பத் மீது போலீசில் புகார்
துக்ளக் பத்திரிகை ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை அவதூறாக பேசிய நாஞ்சில் சம்பத் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம்: துக்ளக் பத்திரிகை ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை அவதூறாக பேசியதாக தினகரன் அணி பேச்சாளர் நாஞ்சில் சம்பத் மீது சிதம்பரம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சசிகலா, தினகரனின் தீவிர விசுவாசியான நாஞ்சில் சம்பத், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து பாஜகவினர் நேற்று சென்னை பட்டினப்பாக்கத்தில் நாஞ்சில் சம்பத் வீட்டை முற்றுகையிட்டனர்.
மேலும் நாஞ்சில் சம்பத் மீது ஆங்காங்கே போலீசில் புகார் கொடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்பு தர கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நாஞ்சில் சம்பத்தின் வழக்கறிஞர்கள் மனு கொடுத்தனர்.
இந்நிலையில் சிதம்பரம் போலீசில் நாஞ்சில் சம்பத் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. துக்ளக் பத்திரிகை ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை நாஞ்சில் சம்பத் அவதூறாக பேசியதாக அவரது உறவினர் கார்த்திக் என்பவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.