தப்பான சாதி சான்றிதழை வைத்துள்ளாரா? சங்கரன்கோவில் வேட்பாளர் மீது பரபரப்பு புகார்
நெல்லை: சாதி சான்றிதழை மாற்றி கொடுத்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து மாநில தேர்தல் ஆணையம் கலெக்டரை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டசபைக்கு மே 16ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் அதிமுக தலைமை கடந்த 4ம் தேதி 227 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தது. இதில் 100க்கும் மேற்பட்டோர் புதுமுகங்கள் ஆவர்.

இதனால், தேர்தலில் சீட் கிடைக்கும் என எதிர்பார்த்த அதிமுகவினர் ஏமாற்றமடைந்து வேட்பாளர் மீதான புகார்களை கட்சி தலைமைக்கு பேக்ஸ் மூலம் அனுப்பி வருகின்றனர். இதில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தனி தொகுதி வேட்பாளர் ராஜலெட்சுமி மீது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் வைத்துள்ள சாதி சான்றிதழில் குழப்பம் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் இந்த சாதி சான்றிதழை கொடுத்து தான் அவர் போட்டியிட்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்து சங்கரன்கோவில் காந்திநகரை சேர்ந்த தங்கராஜ் என்பவர் மாநில தேர்தல் ஆணையம் மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியாளருக்கு அனுப்பியுள்ள புகாரில், ‘2016ம் சட்டமன்ற தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராஜலெட்சுமியின் உண்மையான பெயர் அந்தோணி செல்வி.
இவர் கிறிஸ்தவ தாய், தந்தைக்கு பிறந்தவர். கிறிஸ்தவ பள்ளர் இனத்தை சேர்ந்தவர். அந்தோணி செல்வி என்ற பெயரை அரசிதழில் பெயர் மாற்றம் செய்துள்ளார். பள்ளி ஆவணங்களில், அசல் சான்றிதழ்களில் அந்தோணி செல்வி என்றே இருந்து வருகிறது.
மேற்படி விபரங்களை மறைத்து புளியங்குடி தனியார் கல்லூரியில் படித்து இந்து பள்ளர் என போலியாக சான்று பெற்றுள்ளார். இவர் 2014 உள்ளாட்சி தேர்தலில் தவறான சான்றிதழ் பெற்று வெற்றி பெற்றுள்ளார்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் புகாரைத் தொடர்ந்து, மாநில தேர்தல் ஆணையம் இது தொடர்பாக விசாரித்து அறிக்கை அனுப்பும்படி நெல்லை மாவட்ட ஆட்சியாளருக்கு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications