"நீங்க என்னிடம் கேட்டதே தப்பு"... கமிஷனர் ஆபீஸை கலக்கிய ஒரு "அராத்து" புகார்!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையான கையோடு தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது ஒரு தாக்குதல் புகாரோடு சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு ஒரு புதுமுக நடிகர் வந்தார். ஆனால் அவர் கூறிய புகார் பொய்யோ என்று உடனடியாக சந்தேகிக்கும் வகையிலான சம்பவத்தை, சம்பவ இடத்திலேயே செய்தியாளர்கள் சந்தித்தனர்.
சென்னை, சாலிகிராமம் கண்ணபிரான் காலனியைச் சேர்ந்தவர் பசீர் அஹமது என்ற விஜய் கார்த்திக். இவர் நேற்று வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:-
எனது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ சாய் பிக்சர்ஸ் மூலம் "அராத்து" என்ற பெயரில் திரைப்படம் தயாரித்து, அதில் கதாநாயகனாக நடிக்கிறேன். அதிமுகவில் நான் உறுப்பினராக உள்ளேன். இந்த நிலையில், திங்கள்கிழமை காலை "அராத்து' திரைப்படம் தொடர்பாக என் அலுவலகத்தில் பிரபல இயக்குநர் ஆர்.சுந்தரராஜனுடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை என செய்தி வெளியானது.
அப்போது எங்கள் அலுவலகத்துக்கு வெளியில் விஜயகாந்த் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் ஜெயலலிதாவை அசிங்கமாக வார்த்தைகளால் திட்டி, எங்களை வெளியில் வரும்படி மிரட்டினர். பின்னர் எங்கள் அலுவலகத்தையும், கார்களையும் அடித்து நொறுக்கினர்.
இதையடுத்து நான் உயிருக்கு பயந்து அங்கிருந்து ஓடிவந்துவிட்டேன். எனது அலுவலகத்தில் திரைப்பட இயக்குனர் ஆர்.சுந்தரராஜனை உள்ளே வைத்து பூட்டி மிரட்டி வருகின்றனர். அவரை மீட்க வேண்டும். எங்கள் அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய விஜயகாந்த் உட்பட அவரது அடியாட்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்' எனக் கூறப்பட்டிருந்தது.
இந்தப் புகார் குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டபுள் ஆக்ஷனா ?
இதற்கிடையே, புகார் கொடுக்கப்பட்ட அதே நேரத்தில் கமிஷனர் அலுவலகத்தில் கார் ஒன்றில் அமர்ந்திருந்தார் திரைப்பட இயக்குநர் ஆர்.சுந்தரராஜன். அட, அடைத்து வைக்கப்பட்டிருந்தவரே இங்கு இருக்கிறாரே.. அது எப்படி என்று குழம்பிப் போன செய்தியாளர்கள் அவரிடம் ஓடினார்கள்.
‘உங்களை அலுவலகத்தில் பூட்டி வைத்து சிறை பிடித்து வைத்துள்ளதாக புகார் மனுவில் கூறியுள்ளார்களே?' எனக் கேள்வி எழுப்பினர். அதைக் கேட்ட ஆர்.சுந்தரராஜன், நான் இப்ப எங்கிருக்கிறேன் என்று ரேஞ்சுக்கு செய்தியாளர்களைக் குழப்பினார்.. ‘எனக்கு எதுவும் தெரியாது. நீங்கள் என்னிடம் கேட்டதே தப்பு' என்பதே சுந்தரராஜனின் பதிலாக இருந்தது.
ஒரு வேளை இது டபுள் ஆக்ஷனாக இருக்குமோ?












Click it and Unblock the Notifications