பாலியல் தொல்லை இருந்தால் எதற்கு அடுத்தடுத்து செல்கின்றனர்.. நடிகைகளுக்கு லதா கேள்வி!
பாலியல் தொல்லை குறித்து புகார் அளிப்பது பப்ளிட்டிக்காக இருக்கலாம் என லதா கூறியுள்ளார்.
ஈரோடு: நடிகைகள் பாலியல் தொல்லை குறித்து வெளிப்படுத்துவதே தவறு, அப்படி இருக்கும்பட்சத்தில் எதற்கு அவர்கள் அடுத்தடுத்து செல்ல வேண்டும் என்று நடிகை லதா கேள்வி எழுப்பியுள்ளார்.
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நடிகை லதா ஈரோடு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற அந்த காலங்களில் நடிப்பு திறமை என்பது கடினமாக இருந்தது. ஆனால் தற்போது புதிய தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் நடிப்பு சுலபமாக இருக்கிறது. அதனால் புதுமுக நடிகர்கள் நடிப்பு துறைக்கு துணிந்து வருகின்றனர்.
நடிப்பு மட்டுமின்றி எந்த துறையாக இருந்தாலும் அதில் முழு ஈடுபாடு வேண்டும். எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற அந்த காலங்களில் படங்கள் ரிலீஸ் ஆகிறது என்றால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. 20 தடவை படத்தை பார்த்தேன் என்று கூறுவார்கள் அதனால் படம் 250 நாட்கள் ஓடியது. ஆனால் இன்று 25 நாட்கள் ஓடினாலே வெற்றி படம் என கூறுகின்றனர்.
நடிகைகள் பாலியல் தொல்லை குறித்து வெளிப்படுத்துவதே தவறு. அப்படி இருக்கும்பட்சத்தில் எதற்கு அடுத்தடுத்து செல்கின்றனர்? எல்லா துறைகளிலும் நல்லது கெட்டது என இரண்டுமே இருக்கும். வேண்டுமானால் புகார் கூறியவர்கள் பப்ளிசிட்டிக்காக கூறியிருக்கலாம்.
நடிகர் சங்க பொறுப்பாளர்கள் நன்றாகத்தான் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் ஏதாவது ஒரு பிரச்சினை தமிழகத்தில் வந்து கொண்டுதான் இருக்கிறது. எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்துவதால் மக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர்.
ரஜினி, கமலை எம்.ஜி.ஆருடன் ஒப்பிட முடியாது. எம்.ஜி.ஆர் மக்களுக்காகவே வாழ்ந்தவர். எம்.ஜி.ஆர் வழியில் இவர்கள் இருவரும் வருவதாக இருந்தால் அவர்களை வரவேற்கிறேன். ரஜினி, கமல் செயல்படுவது குறித்துதான் அவர்களின் அரசியல் எதிர்காலம் இருக்கும்.
நான் தற்போது அதிமுகவில்தான் உள்ளேன். இன்னும் ஒரு மாதத்தில் அரசியல் பயணம் குறித்து முடிவு அறிவிக்க உள்ளேன். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., வழியில் மக்களுக்காக சேவை செய்வதற்காக வரும் தேர்தல்களில் தீவிர அரசியலில் ஈடுபடுவேன்.
இவ்வாறு நடிகை லதா கூறினார்.