ஓடும் பஸ்சில் கண்டக்டர் வெட்டிக் கொலை
வீராணம்: ஓடும் பஸ்ஸிலேயே ஆயுதங்களால் தாக்கப்பட்டு கண்டக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
வீராணம் அருகே முன்விரோதம் காரணமாக அரசு பஸ் கண்டக்டர் கொலை செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் வீராணம் அருகே வலசையூர் அடுத்த பள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் , அரசு பஸ் கண்டக்டராக பணி புரிந்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் இரவு வலசையூரில் இருந்து சேலம் வந்த டவுன் பஸ்சில் பணியில் இருந்தார். அப்போது சின்னனூர் பஸ் ஸ்டாப் அருகே பஸ் வந்த போது பஸ்சை நிறுத்திய கும்பல் கண்டக்டர் சண்முகத்தை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பியது. கொலையாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் பற்றி தனிப்படை போலீசார் கூறியதாவது, "கொலை செய்யப்பட்ட சண்முகத்தின் மகன் சுரேன் பாபு வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்துள்ளார். இப்பிரச்னையில் அப்பெண்ணின் அண்ணன் 2009 இல் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.
இதே போல் தன் அண்ணன் மகனுக்கும் பருத்திக்காட்டை சேர்ந்த வேறு சமூகத்து பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளார். இது போன்ற முன்விரோத காரணங்களால் சண்முகம் கொலை செய்யப்பட்டிருக்கலாம்" என்று கூறியுள்ளனர்.