அதிருப்தி த.மா.கா.வினருக்காக காங். கதவுகள் திறந்தே இருக்கின்றன: ஈவிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: கூட்டணி விவகாரத்தில் உறுதியான முடிவெடுக்க முடியாமல் தடுமாறும் தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்கு அக்கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் அதிருப்தியில் உள்ள தமாகாவினர் மீண்டும் வந்தால் அவர்களுக்காக காங்கிரஸ் கதவு திறந்தே இருக்கிறது என்று தமிழக காங். கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அழைப்பு விடுத்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக, தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, பாஜக என அனைத்து கட்சிகளுடனும் த.மா.கா. பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் திமுக கூட்டணியில் தமாகா இடம்பெற காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதனால் அதிமுகவுடன் மும்முரமான பேச்சுவார்த்தையை நடத்தியது. அதிமுகவும் தமாகாவுக்கு 15 தொகுதிகளை ஒதுக்கீடு செய்து இரட்டை இலை சின்னத்தில் நிற்குமாறு கூறியது. இதை ஏற்க மறுத்த ஜி.கே.வாசன், தம்முடைய தென்னந்தோப்பு சின்னத்தில்தான் நிற்க முடியும் என திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து தமாகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பாஜக ஒரு குண்டை வீசியது. இதனால் தமாகாவில் கடும் சலசலப்பு ஏற்பட்டது. தற்போது மக்கள் நலக் கூட்டணியில் தமாகா இணையலாம் என கூறப்படுகிறது.
இப்படி கூட்டணி விவகாரத்தில் தெளிவான முடிவெடுக்க முடியாமல் தடுமாறும் வாசனின் போக்குக்கு தமாகாவில் எதிர்ப்பு உருவாகியுள்ளது. பீட்டர் அல்போன்ஸ் தலைமையிலான அதிருப்தி குழுவினர் தனி அணியாக திமுக கூட்டணியில் இடம்பெற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தமாகா அதிருப்தியாளர்கள், மீண்டும் காங்கிரஸில் சேர விரும்பினால் அவர்களுக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன் அழைப்பு விடுத்துள்ளார்.