காங். தலைமையில் அமமுக, இடதுசாரிகள், விசிக புதிய கூட்டணி? டெல்லியில் விறுவிறு ஆலோசனை!
Recommended Video
சென்னை: தமிழக அரசியலில் நீண்ட காலத்துக்குப் பின் காங்கிரஸ் தலைமையில் புதிய அணி அமைவதற்கான சமிக்ஞைகள் வெளிப்படுகின்றன.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை திமுக, அதிமுகவின் தோள்களில்தான் நீண்டகாலமாக சவாரி செய்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகாலமாக திமுக அணியில்தான் காங்கிரஸ் இருந்து வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதியை ராகுல் காந்தி தமிழகம் வந்த போது கண்டுகொள்ளாமலேயே இருந்த காலங்களும் உண்டு. ஆனாலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி உடைந்தது இல்லை.
சிறுத்தைகளுடன் வெளியேறும் காங்.
தற்போதைய நிலவரமே வேறாகிவிட்டது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறார்கள். காங்கிரஸோ சிறுத்தைகளையும் இழுத்துக் கொண்டு வெளியே போகிறது.
டெல்லியில் விறுவிறு ஆலோசனை
இது தொடர்பாக கடந்த சில நாட்களாக டெல்லியில் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. டெல்லி மேலிடம் கொடுத்த கிரீன் சிக்னலால் திமுகவை மிரட்டும் வகையில் திருநாவுக்கரசர் பேட்டியளித்தார்.
திருமாவிடம் கேட்ட ராகுல்
அத்துடன் ராகுல் காந்தியை திருமாவளவனும் சந்தித்தார். இச்சந்திப்பில் திமுகவின் நிலை குறித்து விரிவாக விவாதித்துள்ளனர். பின்னர் தினகரனின் பலம்; தினகரனுடன் இணைந்து கூட்டணி அமைக்கலாம் என்கிற திருநாவுக்கரசரின் யோசனை குறித்தும் திருமாவளவனிடம் ராகுல் கேட்டிருக்கிறார்.
காங். தலைமையில் மெகா கூட்டணி
அதிமுகவின் தொண்டர்கள், தினகரன் பக்கம் இருப்பதாக திருமாவளவன் தரப்பு கூறியிருக்கிறது. மேலும் தமிழகத்தில் இடதுசாரிகளுடன் தாங்கள் இணக்கமாக இருப்பதால் காங்கிரஸ் தலைமையில் ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க முடியும் என நம்பிக்கையை வெளிப்படுத்தினாராம் திருமாவளவன்.