உள்ளாட்சி தேர்தல்... மு.க. ஸ்டாலின் வியூகத்தால் காங். தலைவர்கள் அதிர்ச்சி
சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வகுத்து வரும் வியூகத்தால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் கடந்த 28-ந் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ஸ்டாலின் கூட்டியிருந்தார். இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.

காங். கூட்டணிக்கு எதிர்ப்பு
அப்போது மாவட்ட செயலாளர்களில் பலரும் காங்கிரஸ் கூட்டணி வேண்டாம் என கூறியுள்ளார். சிலர் மட்டும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

தனித்தனி ஆலோசனை
ஆனால் ஸ்டாலினோ இதுபற்றி எந்த கருத்தையும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூறவில்லையாம். அதே நேரத்தில் இக்கூட்டத்துக்கு பின்னர் ஒவ்வொரு மாவட்ட செயலரையும் தனித்தனியே அழைத்து பேசியுள்ளார் ஸ்டாலின்.

ஓடவிடுங்கள்...
அப்போது, உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸுடனான கூட்டணியை மாவட்ட அளவிலேயே பார்த்து கொள்ளுங்கள். கடந்த காலங்களைப் போல காங்கிரஸுக்கு இத்தனை சதவீதம் என எந்த கணக்கும் இல்லை. அவர்களாகவே கூட்டணியைவிட்டு வெளியேறி ஓடும் நிலைக்கு இடங்களை ஒதுக்குங்கள். சட்டசபை, லோக்சபா தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் என சொல்லிவிடுங்கள் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதிர்ச்சியில் காங்.
அதாவது சென்னையில் 200 வார்டுகள் உள்ளன. இதில் 5 அல்லது 10 மட்டும் காங்கிரஸுக்கு தருவது; அதை ஏற்க மறுத்தால் நீங்க தனித்தே போட்டியிடுங்க என விரட்டிவிடுவது இதுதான் ஸ்டாலினின் திட்டமாம். தொடர்ந்து திமுகவுடன் முட்டிக் கொண்டே இருக்கும் தமிழக காங். கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசருக்கு இப்படித்தான் பதில்தர முடியும் என்கிறதாம் ஸ்டாலின் தரப்பு. இந்த வியூகத்தால் உள்ளாட்சி தேர்தலில் என்ன நடக்குமோ என பீதியில் இருக்கின்றனராம் காங்கிரஸ் தலைவர்கள்.












Click it and Unblock the Notifications