காமராஜர் எங்களுக்குத்தான் சொந்தம்… வரிந்து கட்டும் காங்கிரஸ், பாஜக, பாமக
சென்னை: காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது. ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் காமராஜருக்கு சொந்தம் கொண்டாடி அவர் வழியில் ஆட்சி அமைப்போம் என்று பரபரப்பை கிளப்பி வருகிறது. திடீரென்று பாஜகவினர் காமராஜர் பிறந்தநாளை கொண்டாட தயாராகி வருகின்றனர். ஏற்கனவே மூன்று பேர் காமராஜரை சொந்தம் கொண்டாடி வரும் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியினரோ காமராஜர் ஆட்சி அமைக்க நாங்கள்தான் தகுதியானவர்கள் என்று கூறி புது குண்டு ஒன்றை கோவையில் போட்டுள்ளார்.
காமராஜர் பெயரை உச்சரிக்க பாஜகவுக்கு தகுதி கிடையாது. பாஜக. காமராஜர் விழாவை கொண்டாடுவது நகைப்புக்குரியது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். காந்தியை சுட்டுக்கொன்றவர்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்தான். டெல்லியில் காமராஜரை கொல்ல முயற்சி செய்தவர்கள். இவர்கள் காமராஜர் பிறந்தநாளை கொண்டாடப்போவதாக பகல் வேஷம் போடுகின்றனர் தமிழக மக்கள் துணை போக மாட்டார்கள்
இளங்கோவனின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் வெளியிட்டுள்ள கடும் சொற்கள் பாஜகவை பாதிக்காது. மாறாக அவர் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சிக்குத்தான் பொருந்தும் என்று கூறியுள்ளார்.
காமராஜரை நீக்கியவர்கள்
1969 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து காமராஜரை நீக்கியதோடு மட்டுமல்லாமல், கட்சியை உடைத்து தனது பெயரில் இந்திரா காங்கிரஸை உருவாக்கியவர்தான் இந்திரா காந்தி. அன்றைய தினமே காங்கிரஸ் கொலை செய்யப்பட்டுவிட்டது.
ஆதாயம் தேடிய கூட்டம்
இந்திராவால் உடைக்கப்பட்ட காங்கிரஸை உயிர்பிக்கும் முயற்சியில் காமராஜர், மொரார்ஜி தேசாய் போன்ற தலைவர்கள் ஈடுபட்டார்கள். தமிழ்நாட்டில் காமராஜர் அந்த பணியை மேற்கொண்டபோது அவரது செல்வாக்கை பயன்படுத்தி ஆதரவு தேட முயற்சித்த கூட்டம் அவருடன் இருந்து ஆதாயம் தேடியது.
யாருக்கும் தகுதியில்லை
காமராஜர் இறந்த மறு நிமிடமே இந்திராவுக்கு ரத்தின கம்பளம் விரித்து காமராஜரின் சிந்தனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.
எமர்ஜென்சியை கொண்டு வந்து காமராஜரின் சாவுக்கு காரணமான இன்றைய காங்கிரஸ் கட்சிக்கு அவரது பெயரை உச்சரிக்க கடுகளவும் தகுதி இல்லை.
காமராஜர் சாவுக்கு காரணம் யார்?
எமர்ஜென்சியில் காந்தியின் சீடரான 92 வயதான கிருபாளனி போன்ற தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். துடித்துப்போய் கண்டித்தார் காமராஜர். அவரிடம் 1975 ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று எல்லா தலைவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று பொய்யான தகவல் தெரிவிக்கப்பட்டது. யாரும் விடுதலை செய்யப்படாததால் மனம் உடைந்து உயிரிழந்தார். அவரது சாவுக்கு காரணமே இன்றைய காங்கிரஸ்காரர்கள்தான்.
படத்தை மாற்றியவர்கள்
காங்கிரஸ் நூற்றாண்டு விழா மலரில் வேறு படத்தை போட்டு காமராஜரின் பெயரை அச்சிட்டார்கள். அந்த அளவுக்கு காமராஜரின் உருவத்தை கூட தெரியாத காங்கிரசுக்கு அவர் எப்படி சொந்தமாக முடியும்? என்பதை இளங்கோவன் தெளிவுபடுத்த வேண்டும்.
பாஜகவுக்கு உரிமை உண்டு
தேசபக்தியை உயிர் மூச்சாக கொண்ட இயக்கம் பாஜக. நாடு முழுவதும் நாட்டுக்காக உழைத்த தலைவர்களை கெளவுரவித்து வருகிறது. அந்த வகையில் காமராஜரின் தொண்டையும், தேச பக்தியையும், தியாகத்தையும் மதிக்கும் காரணத்தால் அவரை கொண்டாடும் உரிமை பாஜகவுக்கு மட்டும்தான் உண்டு.
அவமானப்படுத்த வேண்டாம்
காமராஜர் பெயரை சொல்லி இன்றைய காங்கிரஸ்காரர்கள் பிழைப்பு நடத்தி கொள்ளட்டும். உரிமை கொண்டாடி அவரை அவமானபடுத்த வேண்டாம் என்று அவரது வழியில் நடக்கும் ஒரு தேசபக்தன் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
சொந்தம் கொண்டாடும் பாமக
காமராஜருக்காக பாஜகவும் பாமகவும் ஒருபுறம் சொந்தம் கொண்டாடி சிண்டை பிடித்துக்கொண்டிருக்க, பாமக வேறு குறுக்குசால் ஓட்டுகிறது. எல்லாரும் ஊழல்வாதிகள், காமராஜர் ஆட்சியமைக்க எங்களுக்கு மட்டுமே தகுதியிருக்கிறது என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாஸ்.
யாருக்குத்தான் சொந்தம்
இப்படி ஆள் ஆளுக்கு காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று கூறிவருகின்றனர். காமராஜர் தனக்காக சொத்து எதுவும் சேர்த்து வைக்கவில்லை. ஆனால் இன்றைக்கு இருக்கும் அரசியல் தலைவர்கள், பலகோடி ரூபாய் சொத்துக்களை சேர்த்து வைத்துக்கொண்டு காமராஜர் ஆட்சியமைப்போம் என்று முழக்கமிடுகின்றனர். இப்படி சண்டை போடும் இவர்கள் காமராஜருக்காக ஏதாவது செய்வார்களா? குறைந்த பட்சம் அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படத்தையாவது தங்களின் கட்சிக்காரர்களைப் பார்க்கச் சொல்வார்களா?