தென்காசிக்கு வந்த காங். வேட்பாளருக்கு அதிருப்தியை மறந்து உற்சாக வரவேற்பு.. 50 கார்களுடன் பேரணி!
தென்காசி: தென்காசி தனித் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமாருக்கு தொகுதியில் கடும் எதிர்ப்பு நிலவி வருவதாக கூறப்பட்ட நிலையில் இன்று அத்தனை பேரும் சேர்ந்து ஜெயக்குமாரை உற்சாகமாக வரவேற்று தொகுதிக்குள் கூட்டி வந்ததை ஊரே கூடி ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தது.
திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு அளிக்கப்படுவதைப் போல தாரை தப்பட்டை முழங்க கலக்கி விட்டனர் வரவேற்பில்.
ராஜபாளையத்திலிருந்து வேட்பாளர் ஜெயக்குமாரை பல்வேறு ஊர்கள் வழியாக அவர்கள் தென்காசிக்கு அழைத்து வந்தனர். இதனால் போகும் வழியெல்லாம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காஞ்சிபுரத்து ஜெயக்குமார்
தென்காசி தனித் தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் ஜெயக்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கா்ஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
லோக்கல் ஆளு வேண்டும்
ஆனால் காஞ்சிபுரத்திலிருந்து இங்கு வேட்பாளரை அறிவித்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது தென்காசி காங்கிரஸார் மத்தியில். போராட்டம் நடத்தப் போவதாகவும் எச்சரித்திருந்தனர்.
5 நாட்களுக்குப் பிறகு தொகுதி விசிட்
இந்த நிலையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு ஐந்து நாட்களுக்குப் பிறகு இன்றுதான் ஜெயக்குமார் தொகுதிக்கு வந்தார்.
தாரை தப்பட்டையுடன்
இதையடுத்து ஜெயக்குமாருக்கு ராஜபாளையத்தில் தாரை தப்பட்டை முழங்க பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர் காங்கிரஸார். கடும் எதிர்ப்பு நிலவி வருவதாக கூறப்பட்ட நிலையில் வரவேற்பு பலமாக இருந்ததைப் பலரும் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர்.
வழியெல்லாம் என்னா மரியாதை என்னா மரியாதை
வழியெல்லாம் ஜெயக்குமாருக்கு வரவேற்பு தரப்பட்டது. அவரும் வழியில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.
50க்கும் மேற்பட்ட கார்களில்
வேட்பாளரைப் பின் தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட கார்களில் தொண்டர்கள் குவிந்து அணிவகுத்து வந்தனர். இதனால் போகும் இடமெல்லாம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
வாஞ்சிநாதனுக்கு வணக்கம்
தென்காசி வந்ததும் அங்குள்ள வாஞ்சிநாதன் சிலைக்கு ஜெயக்குமார் மாலை அணிவித்தார். அப்போது அப்பகுதியில் கால் மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.