திமுக+காங்., காங்.+தேமுதிக.. இப்படி ஒரு கூட்டணி வரப்போகுதாமே.. அப்படியா?
சென்னை: திடீரென்று நமக்கு போன் மூலம் ஒரு தகவல் வந்தது. அதாவது நாளை பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.ஆண்டனி சென்னைக்கு வரப் போவதாகவும் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து கூட்டணியை உறுதி செய்யவுள்ளதாகவும் அந்தத் தகவல் கூறுகிறது.
அதை விட சுவாரஸ்யமானது என்னவென்றால், இதே காங்கிரஸ் கட்சி, தேமுதிகவுடனும் ஒரு கூட்டணி அமைக்கப் போகிறதாம்.
அதாவது எப்படியென்றால் திமுக - காங்கிரஸ் - தேமுதிக மூன்றும் சேர்ந்து தேர்தலைசந்திக்கின்றன. அதேசமயம், திமுக மற்றும் தேமுதிகவுடன் தனித் தனியாக தொகுதிப் பங்கீடு செய்யப் போகிறதாம் காங்கிரஸ்.
அது எப்படி சாத்தியம்.. என்று நாம் போனில் தகவல் சொன்னவரிடம் கேட்டபோது, திமுகவுடன் கூட்டணியாக வர தேமுதிக விரும்பவில்லை என்பதால் இப்படி ஒரு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அவர் விளக்கினார்.

விடிஞ்சு போச்சு.. வெள்ளாவியும் ஆறிப் போச்சு
கூட்டணி அமைக்க வாங்க வாங்க என்று கூப்பிட்டுத் தொண்டைத் தண்ணீர் வற்றக் கத்தியும் திமுகவை சற்றும் திரும்பிப் பார்க்கவில்லை தேமுதிக.

உங்களுக்கும் அதேதான்
அதேபோலத்தான் பாஜகவுக்கும், விளங்கினாற்போல ஒரு பதிலைச் சொல்லாமலேயே கம்மென்று இருக்கிறது தேமுதிக.

காங்கிரஸின் சைடு முயற்சி
இந்த நிலையில்தான் தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க காங்கிரஸ் தரப்பிலிருந்து சிலர் முயற்சி எடுத்தனர்.

ஈவிகேஎஸ் - ஜி.கே.வி.
இவர்களில் முக்கியமானவர்கள் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் மத்தியஅமைச்சர் ஜி.கே.வாசன்.

பேசாம இப்படிச் செஞ்சுட்டா என்ன
இவர்கள் விஜயகாந்த்திடம் பேசிய வகையில்,அவருக்கு திமுகவுடன் பகிரங்கமாக கூட்டணி அமைக்க மனசு ஒப்பவில்லை என்று தெரிய வந்ததாம். இதையடுத்து இளங்கோவன் தரப்பு ஒரு ஐடியாவைக் கொடுத்ததாம்.

அதாவது என்னன்னா...
அதாவது, காங்கிரஸ், திமுக கூட்டணியை ஏற்படுத்துவது. தங்களுக்கான தொகுதிகளை திமுகவிடம் வாங்குவது. அதன் பின்னர் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து, திமுகவிடமிருந்து வாங்கிய தொகுதிகளை தங்களுக்குள் பப்பாதியாக பிரித்துக் கொண்டு தேர்தலை சந்திப்பது. ஒரு கூட்டணி அமைக்க வேண்டியது.

ஒரு கூட்டணி.. 2 சைடு கூட்டணி
அதாவது மூன்றுகட்சிகளும் தனித் தனியாகபோகாமல், இருகூட்டணிகளாக பிரிந்து தேர்தலை ஒன்றாகச் சந்திப்பதுதான் இவர்களின் திட்டமாம்.

அதுக்காகத்தான் வருகிறாரா ஆண்டனி
அதற்காகத்தான் நாளை சென்னை வருகிறாராம் ஆண்டனி. கருணாநிதியுடன் பேசிய பிறகு அதுகுறித்து சோனியாவிடம் சொல்வாராம்.

பிரதமரை சந்திக்கும் விஜயகாந்த்
இந்த நிலையில் நாளை தனது கட்சி எம்.எல்.ஏக்களுடன் பிரதமரைச் சந்திக்கவுள்ளார் விஜயகாந்த். அதன் பிறகு அவருக்கும்,காங்கிரஸுக்கும் இடையிலான டீலிங் முடிவு செய்யப்படுமாம்.
என்ன நடக்குதுன்னே தெளிவாப் புரியவில்லைதான்.. ஆனால் அரசியலாச்சே.. என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் நடக்கும்..












Click it and Unblock the Notifications