காங்கிரஸை தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்.. தூத்துக்குடி வேட்பாளர் சண்முகம்
தூத்துக்குடி: காங்கிரஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தவறாக புரிந்து கொண்டுள்ளனர். உண்மையில் காங்கிரஸ் தொண்டர்கள் எழுச்சியுடன் உள்ளனர் என்று தூத்துக்குடி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஏ.பி..சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காங்கிரஸின் 10ஆண்டுகால ஆட்சியில் செய்த சாதனைகள் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியைத் தேடித்தரும்.
தமிழகத்தில் காங்கிரஸ் தனிமைப்படுத்தப்படவில்லை, இதனை மற்றவர்கள் தான் தவறாக புரிந்துகொண்டுள்ளனர். காங்கிரஸ் தொண்டர்கள் பெரும் எழுச்சியுடன் உள்ளனர். தனியாக தேர்தலை சந்திப்பதில் தொண்டர்கள் மகிழ்ச்சி கண்டுள்ளனர்.
தூத்துக்குடி தொகுதியில் பிரதான தொழிலான மீன்பிடி தொழில் மற்றும் உப்பு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்தமுறை திமுக ஆட்சியில் திறக்கப்பட்டு செயல்இழந்து போன உணவு பூங்கா மீண்டும் திறக்கப்படும்.
வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும், தொகுதியின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, ராகுல்காந்தி இருவரில் யாராவது ஒருவர் தேர்தல் பிரசாரத்திற்கு வருகை தருவார்கள் என்று நம்பிக்கையுடன் கூறினார்.