இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது காங்கிரஸ் தான், திமுக, அதிமுக இல்லை: தங்கபாலு
சிதம்பரம்: திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளுக்கு வாக்களிக்க நினைப்பவர்கள் நம் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது காங்கிரஸ் தான் என்பதை மறக்க வேண்டாம் என்று காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் டாக்டர் ப. வள்ளல் பெருமான் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அக்கட்சி தலைவர் கே. வி. தங்கபாலு சிதம்பரம் காந்திசிலை அருகே பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் கூறுகையில்,
ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெற ரூ. 19 ஆயிரம் கோடி கல்விக் கடன் கொடுத்துள்ளோம். மேலும் ரூ. 21 ஆயிரம் கோடி விவசாய கடன் நிவாரணம் வழங்கியுள்ளோம். ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி 120 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்காக பாடுபடும் ஒரே கட்சி காங்கிரஸ் தான்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும். சிறுபான்மையினருக்கும் முன்னுரிமை கொடுப்பது காங்கிரஸ் தான். சாதி, மத வேறுபாடுகளைத் தாண்டி அனைத்து சமூகத்தினரையும் அரவணைப்பது காங்கிரஸ். தகவல் அறியும் சட்டத்தை கொண்டு வந்து மக்களுக்கு இரண்டாவது சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்தோம்.
திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளுக்கு வாக்களிக்க நினைப்பவர்கள் நம் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது காங்கிரஸ் தான் என்பதை மறக்க வேண்டாம். உலகிலேயே 70 கோடி மக்களுக்கு உணவு அளிக்கும் திட்டத்தை சட்டமாக கொண்டு வந்தவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங். மதசார்பற்ற அரசுக்கு காங்கிரஸால் மட்டுமே தலைமை ஏற்க முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications