மேலிட முடிவுக்கு கட்டுப்பட்டு.. எடப்பாடிக்கு எதிர்ப்பு… கடுப்போடு முடிவெடுத்த திருநாவுக்கரசர்
காங்கிரஸ் மேலிடம் எடுத்த முடிவுக்கு கட்டுப்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக காங்கிரஸ் வாக்களிக்கும் என்றும் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.
சென்னை: சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவளித்து வாக்களிக்க விரும்பிய நிலைக்கு மாறாக, இன்று வேறு வழியில்லாமல் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து வாக்களிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.
நேற்று காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டத்தை கொறடா விஜயதாரணி கூட்டினார். 8 எம்எல்ஏக்களும் கலந்து கொண்ட கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் இதற்கு உடன்படவில்லை. இதனையடுத்து எடுக்கப்பட்ட முடிவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இன்று காலை சத்தியமூர்த்தி பவனில் எம்எல்ஏக்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் அடங்கிய கூட்டம் நடைபெற்றது. அதில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக திருநாவுக்கரசர் அறிவித்தார்.
இதுகுறித்து திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம், எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்திருக்கிற தீர்மானத்திற்கு எதிராக வாக்களிப்பது என்பது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடாகும். இதனை விளக்கி காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் சொல்லி இருக்கிறோம். அதன்படி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வாக்களிப்பார்கள் என்று கூறினார்.
இவ்வளவு நேரம் கழித்த தாமதமாக ஏன் அறிவித்தீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு உடனடியாக பதில் சொல்ல முடியாமல் திணறிய திருநாவுக்கரசர், நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு அரை மணி நேரம் இருக்கிறது என்று அதற்குள் அறிவித்துவிட்டோம் என்று சமாளித்தார்.












Click it and Unblock the Notifications