நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநர் உத்தரவிடாவிட்டால் ஜனாதிபதியை சந்திப்போம்.. திருநாவுக்கரசர்
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிடாவிட்டால் ஜனாதிபதியை சந்திப்போம் என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
சென்னை: தற்போதைய அரசாங்கத்திற்கு அதிமுக எம்எல்ஏ-க்களின் ஆதரவு கிடையாது என்று ஆளுநரிடம் தெரிவித்ததாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வருக்கான ஆதரவை விலக்கிக் கொண்டதால் அதிமுக ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட கோரிக்கை விடுத்து வருகிறது.
இந்நிலையில் ஆளுநரை சந்தித்தும் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து தனது மகளின் திருமணத்துக்கு அழைப்பு விடுப்பதற்காக ஆளுநர் வித்யாசாகர் ராவை
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார்.
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுக, காங்கிரஸ் அளித்த மனுக்கள் குறித்து ஆளுநரிடம் கேட்டறிந்தேன். தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் பேசினேன். தற்போதைய அதிமுக ஆட்சிக்கு அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லை என்று தெரிவித்தேன்.
மேலும் சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக திருநாவுக்கரசர் தெரிவித்தார். மேலும் ஆளுநர் அவ்வாறு உத்தரவிடாத பட்சத்தில் ஜனாதிபதியை சந்தித்து வலியுறுத்துவோம் என்றார்.