வைகோ பாணியில் நடை பயணம் கிளம்புகிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்!
சென்னை: பாஜக அரசுக்கு எதிராக நடைப்பயண பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரது அறிக்கையில், "இந்திய விடுதலைக்காக 60 ஆண்டு காலம் போராடி நவ இந்தியாவை நிர்மாணிப்பதில் அளப்பறிய பங்காற்றி, வரலாற்றுப் புகழ்மிக்க 130 ஆண்டு கால இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராகச் செயல்பட்டு வருகிற இளந்தலைவர் ராகுல்காந்தி பிறந்த ஜூன் 19ம் நாளை மிகச்சிறப்பாக கொண்டாடுவதென தமிழக காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருக்கிறது.

இதன்படி அன்று காலை ஏழை எளிய மக்கள் பயன் பெறுகிற வகையில் இலவச மருத்துவ முகாம்களை அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக நடத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த ஓராண்டு காலமாக பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை துண்டு பிரசுரத்தில் பட்டியலிட்டு நாட்டு மக்களிடையே விநியோகித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாதயாத்திரை பிரச்சாரத்தை இளந்தலைவர் ராகுல்காந்தி பிறந்த ஜூன் 19ம் தேதி மாலை 3 மணி முதல் 7 மணி வரை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் நடத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
தங்களது மாவட்டத்திற்குட்பட்ட மக்கள் திரள் அதிகமாக உள்ள பகுதிகளில் இத்தகைய பிரச்சாரங்களை நடத்துவது பொருத்தமாக இருக்கும். இந்த பிரச்சாரமே இளந்தலைவர் ராகுல்காந்தியின் பிறந்த நாளில் நாம் செய்கிற இயக்கப் பணியாக இருக்க வேண்டும்.
மத்திய பா.ஜ.க அரசு நிதிநிலை அறிக்கையில் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கிய நிதியை தற்போது குறைத்து நிதிவெட்டை கடுமையாக அமல்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக சமூகத்துறையில் மட்டும் 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி நிதி குறைக்கப்பட்டுள்ளது. இதைவிட மக்கள் விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது.
மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக ராகுல்காந்தி தொடுத்து வரும் கடுமையான எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு வலிமை கூட்டுகிற வகையில் தமிழக காங்கிரஸ் கட்சியினர் ஆக்கப்பூர்வமாக நடத்தும் பாதயாத்திரை பிரச்சாரமே அவருக்கு நாம் வழங்குகிற பிறந்தநாள் பரிசாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications