த.மா.கா.வையும் வளைக்கும் திமுக 'மூவ்'... கடுப்பில் ராகுல்... கூட்டணி கலகலக்குமா? களைகட்டுமா?
சென்னை: த.மா.கா.வையும் கூட்டணியில் சேர்க்கும் திமுகவின் வியூகத்தை காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனைத் தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ள தமிழக காங். தலைவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இணைந்து தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் வாசனின் த.மா.கா., அதிமுக, ம.ந.கூ அல்லது தேமுதிகவுடன்தான் போகும் என கருதியிருந்தனர்.
இதனடிப்படையிலேயே திமுக கூட்டணியில் 63 தொகுதிகளைக் கேட்டிருந்தாலும் எப்படியும் 50 தொகுதிகளை வாங்கிவிடலாம் என நம்பிக்கையோடு இருந்தது காங். ஆனால் கடந்த வாரம் சென்னை வந்த குலாம்நபி ஆசாத், கருணாநிதியை சந்தித்த போதுதான் த.மா.கா.வுடனும் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவது காங்கிரசாருக்கு தெரியவந்தது.

50 தொகுதி ஆசைக்கு வேட்டு
த.மா.கா.வும் கூட்டணி வரக் கூடும்; அப்போது அந்த கட்சிக்கு 20 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என்று கூறி காங்கிரஸ் கட்சியின் 50 தொகுதிகள் ஆசைக்கு திமுக தரப்பில் வேட்டு வைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே குலாம்நபி ஆசாத் சென்னை புறப்படும்போதே, வாசன் இருக்கிற கூட்டணியே வேண்டாம்; தனித்தே போட்டியிடலாம் என ராகுல் திட்டவட்டமாக கூறியிருந்தார்.

தேக்கநிலை
இந்நிலையில் திமுக இப்படி ஒரு குண்டை வீச கருணாநிதி- குலாம்நபி ஆசாத் சந்திப்பில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. குலாம்நபி ஆசாத் தொகுதிப் பங்கீடு உடன்பாட்டில் கையெழுத்திடுவார் என ரொம்பவே எதிர்பார்த்த திமுக சற்றே ஏமாற்றமடைந்தது. இதனைத் தொடர்ந்து திமுக- காங். கூட்டணி பேச்சுவார்த்தையில் தேக்க நிலை உருவானது.

சமாதான முயற்சி
இதனிடையே தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் டெல்லியில் முகாமிட்டு மேலிடத்துடன் பேசிவருகின்றனர். ஆகக் கூடுமானவரை திமுக கூட்டணியில் நீடித்து 40 தொகுதிகளாவது பெற முயற்சிப்போம்; வாசன் இடம்பெறுவதாலேயே நாம் தனித்து போட்டியிட வேண்டாம் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

திமுக ப்ளான் இது
திமுகவைப் பொறுத்தவரையில் முஸ்லிம்கள் மற்றும் 2 காங்கிரஸ் கட்சிகளின் வாக்குகளை உறுதி செய்து கொள்வதன் மூலம் வராமல் போன இதர கட்சிகளின் வாக்குகளை சமன் செய்துவிடலாம் என்பது ப்ளான். இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ ஆகிய முஸ்லிம் கட்சிகள் திமுகவுக்கு வந்துவிட்டன.
தற்போது காங்கிரஸை சமாதானப்படுத்தி த.மா.கா.வையும் கூட்டணியில் இணைப்பதில் திமுக மும்முரமாக இறங்கியுள்ளது. டெல்லி சென்றுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர்களின் முயற்சி பலித்தால் திமுக கூட்டணி களைகட்டும்... இல்லையெனில் கலகலக்கவும் வாய்ப்பிருக்கிறது என்பதே நிதர்சனம்.












Click it and Unblock the Notifications