அதெப்படி தினகரனை சந்திக்கலாம் விஜயதரணி.. விரைவில் நடவடிக்கை என எம்எல்ஏ பிரின்ஸ் பாய்ச்சல்!
கட்சித் தலைமையின் அனுமதியில்லாமல் டிடிவி. தினகரனை சந்தித்த விஜயதரணி மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் சட்டசபை துணைத் தலைவர் பிரின்ஸ் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுக தோழமை கட்சியல்ல என்பதை மறந்து கட்சியின் தலைமை அனுமதியில்லாமல் செயல்படும் விஜயதரணி மீது கட்சி தலைமை விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் என்று அந்தக் கட்சிய்ன துணைத் தலைவர் பிரின்ஸ் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணத்திற்கு பின் அதிமுக அம்மா அணி, புரட்சி தலைவி அணி, தினகரன் அணி என 3 அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. இந்த அணிகளை பாஜ தலைமை தான் இயக்குகிறது என்று மக்கள் மத்தியில் பேச்சு இருந்து வருகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி, தினகரனின் மாமியார் இறந்த துக்கம் விசாரித்து விட்டு அதிமுக 3 அணிகளும் இணைய வேண்டும் என பேட்டியளித்தார். இதுமக்கள் மத்தியிலும் காங்கிரசார் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எதிர்க்கட்சியினர் வீட்டுக்கு செல்வதா?
இதுகுறித்து காங்கிரஸ் சட்டமன்ற துணைத்தலைவர் பிரின்ஸ் எம்எல்ஏவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: எந்த கட்சியினர் வீட்டிலும் துக்கம் விசாரிக்க செல்லலாம். அது தவறில்லை.

இது நமது வேலையல்ல
ஆனால் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி என்ற கோஷத்தோடு காங்கிரஸ் கட்சி எழுச்சி பெற்று வருகிறது. இந்த நிலையில் கட்சியினரது விருப்பம் இல்லாமல், சீரழிந்து கிடக்கும் அதிமுகவை இணைக்க முயற்சிப்பது காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவின் வேலை அல்ல.

விரைவில் நடவடிக்கை
அதிமுக நமக்கு தோழமை கட்சியல்ல என்பதை மறந்தும் மக்கள் பிரச்னைகளை பற்றி கவலைப்படாமல் கட்சி தலைமையின் அனுமதியில்லாமல் செயல்படும் விஜயதரணி மீது கட்சி தலைமை விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கும். சோனியா காந்தி, ராகுல்காந்தி கட்டி வளர்க்கும் இயக்கத்தை விஜயதரணி சீரழிக்கிறார் என்று கூறினார்.

எந்த கட்சி எம்எல்ஏ என தெரியவில்லையா?
குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ கூறும்போது, எப்போதும் போல் அதிமுக விவகாரத்திலும் விஜயதரணி எம்எல்ஏ காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ என்பதை மறந்து செயல்படுகிறார். தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபடும் இவர் மீது கட்சி தலைமை விரைவில் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன், என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications