ராகுல் கைதுக்கு கண்டனம்- சென்னையில் திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ் இளங்கோவன், நக்மா, குஷ்பு ஆர்ப்பாட்டம்
சென்னை: டெல்லியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராகுல் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். குமாரி அனந்தன், பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், குஷ்பூ, நக்மா, உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
முன்னாள் ராணுவ வீரர்கள் கோரிக்கையை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடந்த போராட்டத்தின் போது, முன்னாள் ராணுவ வீரர் ராம்கிஷன் கிரேவால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இவரது குடும்பத்தினரை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூற முற்பட்ட ராகுல்காந்தி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு ஐந்தர் மந்தர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டார்.
ராகுல்காந்தி மூன்று முறை கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் மற்றும் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும் ஜனநாயக, சட்டவிரோதச் செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எதிர்கட்சியினர் மீது அடக்குமுறைகள் நாள்தோறும் ஏவி விடப்படுகின்றன. இந்தப் பின்னணியில் ராகுல்காந்தியை செயல்படவிடாமல் தடுப்பதன் மூலம் எதிர்கட்சிகளின் குரல்வளையை நெரித்து விடலாம் என்று பாஜ கனவு காண்கிறது. அதை தகர்க்கிற வகையில் இந்த கண்டன ஆர்பாட்டம் நடைபெறுகிறது என்று திருநாவுக்கரசர் கூறினார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி இழந்த பின்னர் முதன் முறையாக ஈவிகேஎஸ் இளங்கோவன், இந்நாள் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பங்கேற்று பேசினார்.
இங்கு ஜனநாயக விரோத அரசு நடைபெறுகிறது என்று குற்றம் சாட்டிய அவர், இது நாடா? அல்லது காடா என்று குற்றம் சாட்டினார். மாதத்தில் 25 நாட்களும் வெளிநாட்டில் இருக்கிறார் மோடி, 5 நாட்கள் வெளிநாட்டு தலைவர்கள் இங்கு வந்து சுற்றி பார்க்கின்றனர். இன்னும் இரண்டரை வருடங்களில் இந்தியாவின் பிரதமராக ராகுல்காந்தி அமர்வார் என்று கூறினார்.
மாநில அரசியலுக்கு மாறிய ஈவிகேஎஸ் இளங்கோவன், தமிழகத்தில் கைநாட்டு ஆட்சி நடைபெறுவதாக குற்றம் சாட்டினார். இங்கே கருத்துச்சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்றும் அது காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும் என்று குற்றம் சாட்டினார்.