நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கிய அதிமுக எம்.எல்.ஏ. புத்திசந்திரன்
உதகை படுகர் இளைஞர் சங்கத்தின் செயலாளர் ரவிகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தல் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,
படுகர் சங்கத்தின் நிர்வாகத்தில் குறுக்கீடு செய்யக் கூடாது என ஏற்கனவே நீலகிரி சப்-ஜட்ஜ் உத்தரவிட்டார். இந்த உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டி அரசு அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை.
எனவே, போலீஸ் அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், மற்றும் அப்பகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் புத்திசந்திரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதி சசிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி,
சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றவில்லை என உதகை ஆர்.டி.ஓ., இன்ஸ்பெக்டர், தாசில்தார் மற்றும் எம்.எல்.ஏ. புத்திசந்திரன் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ஆர்.டி.ஓ. தாக்கல் செய்த பதில் மனுவைப் பார்க்கும்போது, வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்றவில்லை என்று தெரிய வருகின்றது. எனவே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது என்றார்.