தொடரும் டிவி நடிகர், நடிகைகளின் தற்கொலைகள்.. அதிர்ச்சியில் சின்னத்திரை !
சின்னத்திரை நடிகர், நடிகைகள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கை அதிகரித்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சின்னத்திரையில் நடித்த சாருகேஷ் தொடங்கி இன்றைய சபர்ணா வரை பல நடிகர், நடிகைகள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவது சின்னத்திரை கலைஞர்களை அதிரச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சில ஆண்டுகளாகத் தொடர்ந்து நடிகர், நடிகைகள் தற்கொலைகள் செய்து கொள்ளும் முடிவை எடுப்பது சின்னத்திரை கலைஞர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரையில் பிரபலமாக நடித்துகொண்டிருந்த பல நடிகைகள் கடந்த சில ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டனர். நடிப்பதற்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காமல் போகவே மன உளைச்சலுக்கு ஆளாகி நடிகை, நடிகர்கள், சின்னத்திரை தொழில் நுட்பக்கலைஞர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
நடிகை வைஷ்ணவி
சித்தி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த சாருகேஷ், பணப்பிரச்சினை காரணமாக, 2004ல் இரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார். 2006ல் சின்னத்திரை நடிகை வைஷ்ணவி, காதல் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
முரளி மோகன்
வம்சம், தென்றல் உள்ளிட்ட சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த முரளி மோகன் 2014ம் ஆண்டு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சீரியல் வாய்ப்புக்கள் கிடைக்காததால் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
பாலாஜி யாதவ்
கடந்த வருடம் அரசி உள்ளிட்ட சில தொடர்களை இயக்கிய பாலாஜி யாதவ் டிவி சீரியல் இயக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.
ஷோபனா
சின்னத்திரை தொடர்களிலும் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் நடித்த ஷோபனா உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு நடிக்க முடியாமல் போனதால் மன இறுக்கத்திற்கு ஆளாகி தன் வாழ்வை முடித்துக் கொண்டார்.
பிரதியுஷா
ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிந்தி டப்பிங் சீரியலான மண் வாசனை சீரியலில் நடித்தவர் பிரதியுஷா. கடந்த ஏப்ரல் மாதம் மின் விசிறியில் துப்பட்டாவினால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
சாய் பிரசாந்த்
பாரதி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் சாய் பிரசாந்த். ஏராளமான சீரியல்களிலும் நடித்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காததால் அவர் இந்த முடிவை எடுத்தாக சொல்லப்படுகிறது.
சபர்ணா
இந்த நிலையில் சொந்த பந்தம் டிவி சீரியல் நடிகை சபர்ணா மதுராவயலில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை இன்று செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து டிவி நடிகர்கள், நடிகைகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் சின்னத்திரை வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது