தூத்துக்குடி புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி, எஸ்பி முரளி ரம்பா இருவருமே சர்ச்சைக்குரியவர்கள்!
தூத்துக்குடி புதிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி, எஸ்பி முரளி ரம்பா நியமனங்களும் சர்ச்சைக்குரியதாகி இருக்கிறது.
தூத்துக்குடி: 13 பேரை பலி கொண்ட தூத்துக்குடி படுகொலை சம்பவத்துக்குக் காரணமான தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ், எஸ்பி மோகன் இருவரும் மாற்றப்பட்டு புதிய ஆட்சியராக சந்தீப் நந்தூரி, எஸ்பியாக முரளி ரம்பா இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இருவரும் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கியவர்கள்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அவர்களது 100-வது நாள் போராட்டத்தில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது மாவட்ட நிர்வாகம். எந்த ஒரு விதிமுறையையும் பின்பற்றாமல் போலீசார் விதிமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நேற்றும் இன்றும் 13 அப்பாவி பொதுமக்கள் பலியெடுக்கப்பட்டுள்ளனர்.
இதனால் கொந்தளித்துப் போன தமிழகம், மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், எஸ்.பி. மோகன் இருவரையும் மாற்ற வலியுறுத்தியது. இருவரையும் மாற்றினால்தான் பலிகொள்ளப்பட்டோரின் உடல்களைப் பெறுவோம் என நிபந்தனை விதித்தனர் உறவுகள்.
ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் இன்றும் தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இது அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து தற்போது புதிய தூத்துக்குடி ஆட்சியராக நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியும் எஸ்பியாக முரளி ரம்பாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த இருவருமே பெரும் சர்ச்சைகளில் சிக்கியவர்கள்.
கந்துவட்டி கொடுமையால் மனு கொடுக்க வந்த ஒருகுடும்பத்தையே அலட்சியப்படுத்தியதால் பிஞ்சு குழந்தைகளுடன் அக்குடும்பமே நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து மாண்டது. அதைப்பற்றியெல்லாம் அக்கறை கொள்ளாத சந்தீப் நந்தூரி தம்மை பற்றி விமர்சித்த கார்ட்டூனிஸ்ட்டை சென்னையில் இருந்து அழைத்துவர சிறையில் அடைத்தவர்.
அதேபோல் சர்ச்சைக்குரிய விஷ்வ ஹிந்து பரிஷத் யாத்திரையை தமிழகத்துக்குள் அனுமதித்தார். அனைத்து கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதும் அதைப்பற்றியெல்லாம் சந்தீப் நந்தூரி கவலைப்படவில்லை. உலகிலேயே இல்லாத வகையில் போராடுகிறவர்களுக்கு மட்டும் 144 தடை உத்தரவு பொருந்தும்; சர்ச்சைக்குரிய ரத யாத்திரை செல்லும் என அனுமதி கொடுத்தவர் இந்த சந்தீப் நந்தூரி.
இவரைப் போலதான் நீலகிரி எஸ்பியாக இருந்த முரளி ரம்பா. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களா கொள்ளை வழக்கின் சூத்திரதாரிகளை தப்பவிட்டு பொய்யான சாட்சியங்களை ஊடங்களிடம் காட்டியவர். இதனாலேயே கடும் விமர்சனத்துக்கும் உள்ளானார். அந்த பங்களா கொள்ளையின் பின்னணியில் இருந்த அத்தனை முக்கிய புள்ளிகளையும் தப்பவிட்டவர் முரளி ரம்பா.