பெட்ரோல் விலை உயர்வு மத்திய அரசின் தோல்விக்கு ஒரு உதாரணம்.. சொன்னது யார் தெரியுமா?
பெட்ரோல் விலை உயர்வினால் மத்திய அரசு மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
சென்னை: பெட்ரோல் விலை உச்சத்தை தொட்டது, உச்சத்தை தொட்டது என்று எவ்வளவுதான் செய்திகளை போடுவது என்றே தெரியவில்லை. இதன் உச்சம் எது என்றே தெரியவில்லை. விலை உயர்ந்து கொண்டே போகிறது.
இதுதான் விலை என்று "விலை நிர்ணயத்தை" தொடர்ந்து ஒரு வாரத்துக்கு உச்சரிக்க முடிகிறதா? நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு பயந்துவிட போகிறதா மோடி அரசு? சில தினங்களாக பெட்ரோல் விலை உயர்வுக்கு பல்வேறு கட்சிகள் கண்டனம், எதிர்ப்பு என குரல் ஒலித்து கொண்டே இருந்தது.
ஆனாலும் கடந்த ஞாயிறு அன்று மீண்டும் பெட்ரோல் விலையை உயர்த்தி தாங்கள் எதற்குமே அஞ்சவோ, மசியவோ மாட்டோம் என்பதைதான் இது நிரூபணமாக்கியது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.83.66 ஆகவும், டீசல் லிட்டருக்கு 11 காசுகள் உயர்ந்து ரூ.76.75 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்னும் இதில் சிலிண்டர் விலையும் உயர போகுதாம்.

மலையும்-மடுவும்
ஆரம்பத்தில் பெட்ரோலுக்கான விலையை அரசே தீர்மானித்தது. ஆனால் அந்த முறையை ரத்து செய்துவிட்டு, சர்வதேச சந்தை நிலவரத்திற்கேற்ப விலை தீர்மானிக்கும் முறை கொண்டு வரப்பட்டது. இதையாவது நிரந்தரமாக விட்டார்களா என்றால் அதுவும் இல்லை. 15 நாட்களுக்கு ஒருமுறை விலை மாறும் என்ற முறை வந்தது. இதை கொண்டுவந்தது மோடி அரசுதான். இதையெல்லாம் செய்துவிட்டு தற்போது விலையை மட்டும் எண்ணெய் நிறுவனங்கள்தான் நிர்ணயிக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியுமா? எண்ணெய் விலை குறைவது மடு அளவு என்றால் விலை உயர்வது மலை அளவு.

பெட்ரோல்-டீசல்
அப்படியே சர்வதேச சந்தையே விலை நிர்ணயம் செய்வதாகவே வைத்துக் கொள்வோம். கடந்த காலங்களில் கச்சா எண்ணெய் விலையை குறைத்ததே? அப்போது என்ன செய்தார்கள் ஆட்சியாளர்கள்? அதன் பலன் யாருக்காவது போய் சேர்ந்ததா? ஆனால் மறக்காமல் வரியை மட்டும் உயர்த்த தெரிகிறதா? வரியே இல்லாமல், வெளிநாடுகளுக்கு பெட்ரோல்-டீசலை குறைந்த விலையில் ஏற்றுமதி செய்ய மட்டும் மோடி அரசுக்கு மனம் வருகிறதா?
|
மத்திய அரசின் தோல்வி
இந்த வரிவிதிப்பில் மாநில அரசும் சேர்ந்து கொள்கிறது. வரிகளை குறைப்பதன் மூலம்தான் பெட்ரோல் விலையை குறைக்க முடியும் என்றும், பெட்ரோல் விலையைக் குறைப்பதன் மூலம்தான் பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்த முடியும் என்றும் பொருளாதார நிபுணர்கள் பலமுறை சொல்லிவிட்டார்கள். 2012-ல் குஜராத் முதல்வராக இருந்தபோது மோடி ஒரு ட்வீட் போட்டார், அதாவது, "பெட்ரோல் விலை மிகப் பெரும் அளவில் உயர்ந்திருப்பது மத்திய அரசின் தோல்விக்கு ஓர் உதாரணம்" என்று. இப்போது இவர் செய்து கொண்டிருப்பதற்கு என்ன இலக்கணம் சொல்வது?

ராஜஸ்தான் அமைச்சர்
ஏன் பெட்ரோல் விலையை உயர்த்துகிறீர்கள் என்று கேள்வி கேட்டால், "நாங்கள் உயர்த்தவில்லை, விலை உயர்வு இந்தியாவின் கையில் இல்லை என்கிறார் துறை அமைச்சர். இன்னொரு அமைச்சர் இது இன்று நேற்று பிரச்சனை இல்லை, 45 வருஷ பிரச்சனை என்கிறார். விலை உயர்வை சமாளிக்க, பொதுமக்கள் தங்களுடைய தினசரி செலவினங்களை குறைத்துக்கொள்ள வேண்டும்" என ராஜஸ்தான் மாநில அமைச்சர் ராஜ்குமார் ரின்வா அட்வைஸ் வேறு தருகிறார்.

2 வாகனங்கள்
பெட்ரோல் விலையை இவ்வளவு துணிச்சலாக உயர்த்தும்போது வெகுஜன மக்களை சிந்தித்து பார்க்க மாட்டார்களா? கலால் வரியையும், ஜிஎஸ்டி வரியையும் எப்போது அரசு குறைக்கிறதோ அப்போதுதான் இதற்கு ஒரு விடிவுகாலம் ஏற்படும். இப்போது எல்லாமே இயந்திரமயம்தான்.. ஒரு வீட்டுக்கு குறைந்தது 2 வாகனங்களாவது உள்ளது.

விரைவில் அடி...
பெட்ரோல்-டீசல் இல்லாவிட்டால் நாடு எப்படி இயங்கும்? வாகனங்களை இயக்க முடியுமா? அத்தியாவசிய பொருட்கள் விலை உயராதா? கடைசியில் எல்லாம் மக்கள் தலையில்தான் விழ போகிறது. மக்களின் வயிற்றெரிச்சலில் கார்ப்பரேட் வாழ்கிறது. மக்களின் வயிற்றில் அடித்து அரேபிய நாடுகள் வளம்கொழிக்கின்றன. பெட்ரோல் விலை உயர்வே மோடி அரசுக்கு மிகப்பெரிய அடியை விரைவில் தரப்போவது நிச்சயம்!!












Click it and Unblock the Notifications