கந்து வட்டி புகார் : தீக்குளித்த இசக்கி முத்து உடன் போலீஸ் பேசிய பரபரப்பு ஆடியோ
கந்து வட்டி கொடுமை காரணமாக தனது உடலில் தீ வைத்து தற்கொலைக்கு முயன்ற இசக்கி முத்து உடன் போலீசார் பேசிய பரபரப்பு ஆடியோ வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி: கந்து வட்டி கொடுமைக்கு ஆளான இசக்கி முத்து உடன் காவல்துறையினர் பேசிய பரபரப்பு ஆடியோ வெளியாகியுள்ளது.
காசி தர்மத்தைச் சேர்ந்த இசக்கி முத்து சுப்புலட்சுமி தம்பதியர் தங்களின் இரண்டு குழந்தைகளுடன் திங்கட்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். குழந்தைகள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து தங்கள் மீதும் தீ வைத்துக்கொண்டனர்.
இதில் சுப்புலட்சுமி, இரண்டு குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்து விட்டனர். இசக்கி முத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கந்து வட்டி கொடுமை பற்றி 6 முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே இசக்கி முத்து உறவினர்களின் புகார்.
இதன் காரணமாகவே குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்ய இசக்கி முத்து முயற்சி செய்ததாக அவரது சகோதரர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளியான முத்துலட்சுமி என்பவரை கைது செய்து நெல்லை குற்றவியல் நடுவர் மன்ற எண் 1 ல் நீதி துறை நடுவர் ராமதாஸ் முன்பு ஆஜர் படுத்தி நவ.7 வரை நீதிமன்ற காவலில் கொக்கிரகுளம் பெண்கள் கிளை சிறையில் அடைத்துள்ளனர்.
இதனிடையே இசக்கி முத்து உடன் காவல்துறையினர் உரையாடிய பரபரப்பு ஆடியோ வெளியாகியுள்ளது.
அதில் இசக்கி முத்து அவரது மனைவி சுப்புலட்சுமி ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் கூறுவது பதிவாகியுள்ளது. எதற்காக இந்த ஆடியோ பதிவு செய்யப்பட்டது என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை.