சொத்துத் தகராறு: நடிகை மனோரமாவின் பேத்தி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை: நடிகை மனோரமா சொத்து தொடர்பாக அவரின் பேரன் மீது பேத்தி தொடர்ந்த வழக்கில் மனோரமா, அவரது மகன் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்யுமாறு சிட்டி சிவில் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள பழம்பெறும் நடிகை மனோரமா ஆங்காங்கே சில அசையா சொத்துக்களை வாங்கி போட்டிருக்கிறார். இதனை கைப்பற்ற அவரது ரத்த சொந்தங்களுக்கு இடையே கடும்போட்டி நிலவுகிறது. ஆனால் அவரோ உடல்நல பாதிப்பில் தவிக்கிறார்.

சமீபத்தில் அவரது அண்ணன் மருமகள் போட்ட வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இப்போது பேத்தி வழக்கு போட்டிருக்கிறார்.
மனோரமாவின் ஒரே மகன் பூபதி. அவரது மகள் பி.அபிராமி சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில்,
எனது பாட்டி மனோரமா பிரபலமான நடிகை. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பல இடங்களில் அவருக்கு சொத்து உள்ளது. தற்போது மனோரமா உடல் நலம் பாதிக்கப்பட்டு மிக சீரியஸான நிலையில் உள்ளார். தன்னைச் சுற்றி என்ன நடைபெறுகிறது என்று அவருக்கு தெரியாத நிலை உள்ளது. எனது தந்தை பூபதி மதுவுக்கு அடிமையாகி சுய நினைவில்லாமல் இருக்கிறார். அவர்கள், தியாகராயநகரில் உள்ள வீட்டில் தற்போது இருக்கிறார்கள்.
இந்நிலையில், இருவரின் உடல் நலக்குறைவை தனக்கு சாதகமாக பயன்படுத்திய எனது அண்ணனான டாக்டர் ராஜராஜன், எனது பாட்டியின் பல அசையா சொத்துக்களை தனது பெயருக்கு விற்பனை பத்திரம் செய்து கொண்டார்.சட்ட விதிகளுக்கு முரணாக அவர் சொத்துக்களை தனது பெயரில் பதிவு செய்துள்ளார்.
சார்பதிவாளர் அலுவலக அதிகாரிகளின் துணையுடன் விற்பனை ஒப்பந்த பத்திரத்தை மனோரமா வீட்டில் வைத்தே பதிவு செய்துள்ளனர். இது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் தரப்படவில்லை. இந்த பத்திரப் பதிவு மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
சட்ட விதிகளின்படி எங்களுக்கு சம பங்கு தரப்பட வேண்டும். ஆனால், சட்ட விதிகளுக்கு முரணாக எங்களுக்கு தெரியாமல் சொத்துக்களை ராஜராஜன் அபகரித்துவிட்டார். இது தொடர்பாக கடந்த மே 6ம் தேதி ராஜராஜனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன். அதற்கு அவர் மனோரமாவின் பெயருக்கு பதில் அளித்தார். மனோரமாவால் எதுவும் செய்ய முடியாத நிலையில் ராஜராஜனின் நோட்டீசுக்கு பதில் தர முடியவில்லை.
இந்நிலையில், சொத்துக்களை விற்பனை செய்ய ராஜராஜன் முயற்சி செய்து வருகிறார். பல நில புரோக்கர்கள் மனோரமாவின் சொத்துக்களை பார்வையிட்டு வருகிறார்கள். இந்த சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டால் எனக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும். எனவே, மனோரமாவின் சொத்துக்களை ராஜராஜன் பதிவு செய்தது செல்லாது என்று உத்தரவிட வேண்டும். ராஜராஜனோ அல்லது அவரது ஆட்களோ மனோரமாவின் சொத்துகள் மீது உரிமை கொண்டாடுவதற்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு 5வது உதவி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமிகாந்தன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனு மீது மனோரமா, அவரது மகன் பூபதி, அவரது மனைவி தனலட்சுமி, பேரன் ராஜராஜன், பேத்தி மீனாட்சி உள்ளிட்டோர் வரும் 22ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications