கொம்பன் படத்தை கிருஷ்ணசாமிக்கு போட்டுக் காட்ட நீதிபதி உத்தரவு... நாளை தீர்ப்பு
மதுரை: கொம்பன் படத்தை புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் ஓய்வு பெற்ற இரு நீதிபதிகளுக்கு திரையிட்டுக் காட்டுமாறும், அவர்கள் கருத்தைக் கேட்ட பிறகு நாளை தீர்ப்பு கூறுவதாகவும் நீதிபதி தமிழ்வாணன் உத்தரவிட்டார்.
கார்த்தியின் ‘கொம்பன்‘ பட கதை மற்றும் தலைப்பு குறிப்பிட்ட சாதியைக் குறிப்பிடுவதாகவும், இந்தப் படம் வெளியானால் தென் மாவட்டங்களில் ஜாதி மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்திருந்ததுடன் இப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கூடாது என தணிக்கை குழுவினருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

வரும் 2ம் தேதி இப்படம் திரைக்கு வருவதாக அறிவிப்பு வெளியாகியிருப்பதால், இப்படத்தை தடை செய்ய செய்யக்கோரி கிருஷ்ணசாமி மதுரை நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் மனு தாக்கல் செய்தார். அவசர மனுவாக இதை எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என்று கோரினார்.
இதையடுத்து இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது கிருஷ்ணசாமி தரப்பு, "இந்தப்பம் வெளியானால் தென் மாவட்டங்களில் சாதிக் கலவரம் ஏற்படும்''என்று தெரிவித்தார்.
ஆனால் அரசுத் தரப்பு இதனை மறுக்க, சாதிக் கலவரம் நடக்காது என்பதற்கு உத்தரவாதம் தர முடியுமா என்று நீதிபதி கேட்க, அரசு வழக்கறிஞர் மற்றும் காவல் துறையினர் மவுனம் சாதித்தனர்.
பிற்பகலுக்குப் பிறகு இந்த வழக்கை மீண்டும் விசாரித்தார் நீதிபதி. அப்போது படத்திலிருந்து சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்கிவிட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
இதையடுத்து நீதிபதி, வழக்கு தொடுத்த கிருஷ்ணசாமிக்கு படத்தை திரையிட்டுக் காட்ட வேண்டும். அவருடன் மேலும் இரு ஓய்வு பெற்ற நீதிபதிகளும் பார்ப்பார்கள். அவர் படத்தைப் பார்த்துவிட்டு பதில் சொன்ன பிறகு, தீர்ப்பு கூறுகிறேன்," என்று கூறி ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications