ஜெ. தொடர்ந்த அவதூறு வழக்கில் ஜன.18-ல் நேரில் ஆஜராக கருணாநிதிக்கு சம்மன்
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆரம்ப கட்ட் முகாந்திரம் இருப்பதால் ஜனவரி 18-ந் தேதியன்று தி.மு.க. தலைவரும் முரசொலி நாளிதழ் ஆசிரியருமான கருணாநிதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருணாநிதி மீது சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வழக்கறிஞர் எம். எல். ஜெகன் அண்மையில் அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், நவம்பர் 21-ந் தேதியிட்ட முரசொலி நாளிதழில் "கலைஞரின் கேள்வி பதில்" என்ற பகுதியில் 4 ஆண்டு ஆட்சியில் சாதித்தது என்ன? என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது. அதில் தமிழக அரசு பற்றியும், முதல்வர் ஜெயலலிதா பற்றியும் உண்மைக்கு மாறாக, வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் அவதூறான தகவல்களை தெரிவித்துள்ளார் அதன் ஆசிரியரான கருணாநிதி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஆதிநாதன், மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பகட்ட முகாந்திரம் இருப்பதால், இதுகுறித்து ஜனவரி 18-ந் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க முரசொலி ஆசிரியரான கருணாநிதி, முரசொலி செல்வம் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
ஆனந்த விகடன் ஆசிரியருக்கும் உத்தரவு
இதேபோன்று, ஆனந்த விகடனுக்கு எதிரான அவதூறு வழக்கில், அப்பத்திரிகை ஆசிரியர் கண்ணன், பதிப்பாளர் மாதவன் ஆகியோர் பிப்ரவரி 1-ந் தேதி ஆஜராக சம்மன் அனுப்ப நீதிபதி ஆதிநாதன் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications