காவிரி-குண்டாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி விஷம் குடிக்க முயன்ற விவசாயிக்கு நீதிமன்றம் சம்மன்
விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற விவசாயிக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
புதுக்கோட்டை: காவிரி-குண்டாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி விஷம் குடிக்க முயன்ற புதுக்கோட்டை விவசாயி மிசா. மாரிமுத்து என்பவருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது விவசாயிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட காவிரி குண்டாறு பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் விவசாயி மிசா மாரிமுத்து கலந்து கொண்டார்.
அப்போது புதுக்கோட்டை மாவட்டம் உள்பட 7 மாவட்டங்களை வளமாக்கும் காவிரி-குண்டாறு திட்டத்தை இணைப்புத் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும். செயல்படுத்த தவறினால் அடுத்த மாதம் நடக்கும் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதாக விவசாயி மிசா.மாரிமுத்து மிரட்டல் விடுத்தார்.
இதனிடையே கடந்த மாதம் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் கணேஷ் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு விஷத்துடன் வந்த மிசா மாரிமுத்து, விஷம் குடிக்க முயன்றார். இதையடுத்து தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்த நிலையில் இன்று மிசா மாரிமுத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக போலிசார் பதிவு செய்த வழக்கிற்காக மிசா மாரிமுத்து நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த செய்தி விவசாயிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.