கருணாநிதிக்கு அஞ்சலி.. தமிழகத்தில் இன்று கோர்ட்டுகளுக்கு விடுமுறை.. ‘மெரீனா’ கேஸ் மட்டும் நடைபெறும்!
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகத்தில் இன்று கோர்ட்டுகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, அவரது உடலை சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் புதைப்பது தொடர்பான திமுகவின் கோரிக்கையை தமிழக அரசு மறுத்தது. அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக திமுக தாக்கல் செய்த மனுவை, அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றம் நேற்றிரவு விசாரித்தது. அதன் தொடர்ச்சியாக இன்று காலைக்கு இந்த விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகத்தில் இன்று அனைத்து நீதிமன்றங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் ஒதுக்கீடு செய்யும் வழக்கு விசாரணை மட்டும் நடைபெறும் என உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.