மான உணர்ச்சி இருக்கும் எந்தத் தமிழனும் ராம் நாத்துக்கு ஓட்டு போடக் கூடாது.. தா. பாண்டியன் ஆவேசம்
மான உணர்ச்சி இருக்கும் எந்தத் தமிழனும் பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஓட்டு போடக் கூடாது என்ற தா. பாண்டியன் கூறியுள்ளார்.
சென்னை: பாஜகவால் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துவை மான உணர்ச்சி உள்ள எந்தத் தமிழனும் ஆதரித்து ஓட்டு போடக் கூடாது என்று சிபிஐ மூத்த தலைவர் தா. பாண்டியன் கூறியுள்ளார்.
பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால், புதிய ஜனாதிபதி தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது.
அதற்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கியுள்ள நிலையில், பாஜக தனது வேட்பாளராக பிகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்தை அறிவித்துள்ளது.
கடும் எதிர்ப்பு
ஜனாதிபதி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு இந்தியா முழுவதில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ஜனாதிபதி வேட்பாளர் விஷயத்தில் பாஜக ஒருமித்த கருத்து எட்டுவதில் இருந்து தவறிவிட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மம்தா அட்டாக்
இதே போன்று பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ராம் நாத் கோவிந்த்தை விட பெரிய தலித் தலைவர்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
தலித் என்பதால் கொண்டாட முடியாது
இதே போன்று தமிழகத்தில் திருமாவளவன் கடுமையாக எதிர்ப்பை தெரிவித்துள்ளார். ராம்நாத் கோவிந்த் தலித் என்பதால் தலையில் வைத்து கொண்டாட முடியாது என்றும், அவர் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்றும் கடுமை சாடியுள்ளார்.
மானமிருந்தால் ஓட்டு போடாதீங்க
இந்நிலையில், சிபிஐ மூத்த தலைவர் தா. பாண்டியன் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, மான உணர்ச்சி உள்ள எந்தத் தமிழனும் பாஜக அறிவித்துள்ள ராம் நாத் கோவிந்த்திற்கு ஓட்டு போடக் கூடாது என்று ஆவேசமாகக் கூறினார். மேலும், ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட ஒருவர் இந்தியாவின் ஜனாதிபதியாக வரக் கூடாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.