சட்டசபையில் மதுவிலக்கு குறித்து தனித் தீர்மானம்- இ. கம்யூ. எம்.எல்.ஏ. ஆறுமுகம் நோட்டீஸ்
சென்னை: தமிழக சட்டசபையின் நடப்பு கூட்டத் தொடரில் மதுவிலக்கு குறித்து தனித் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சபாநாயகர் தனபாலிடம் நோட்டீஸ் கொடுத்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றதற்கு சபாநாயகர் தனபால் பாராட்டு தெரிவித்திருந்தார்.
பின்னர் மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாம் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சபை நடவடிக்கைகள் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டன.
இன்றைய சபை நடவடிக்கைகளில் பங்கேற்றுவிட்டு வெளியே வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ. ஆறுமுகம் கூறுகையில், மதுவிலக்கு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து தனித் தீர்மானம் நிறைவேற்றக்கோரி சபாநாயகரிடம் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க.வின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், அப்துல் கலாம் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கும் நாளில் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்திருப்பது சரியானது அல்ல; நாளை கூட ஜெயலலிதாவுக்கு பாராட்டுத் தெரிவித்திருக்கலாம் என்றார்.
மேலும் அப்துல் கலாம் இரங்கல் தீர்மானத்தின் மீது பேச தங்களுக்கு அனுமதி அளிக்கப்படாதது வருத்தமளிப்பதாக புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி, ஜவாஹிருல்லா ஆகியோர் தெரிவித்தார்.
நடப்பு கூட்டத் தொடரில் மதுவிலக்கு பிரச்சனையை எழுப்புவோம் என்று காங்கிரஸ் கட்சியின் விஜயதாரணி கூறினார்.