ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம்... மோடியை ஆதரிப்பதா? வைகோ மீது ஜி.ராமகிருஷ்ணன் கடும் பாய்ச்சல்
ரூபாய் நோட்டு செல்லாது விவகாரத்தில் மோடிக்கு ஆதரவு தெரிவிக்கும் வைகோவுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சென்னை: ரூபாய் நோட்டு விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவிக்கும் மதிமுக பொதுச்செயலரும் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் மதிமுக இடையே தொடர்ந்து மோதல்கள் நீடித்து வருகிறது. ரூபாய் நோட்டு செல்லாது விவகாரத்தில் மதிமுகவை தவிர இதர மக்கள் நலக் கூட்டணி கட்சிகள் மோடிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
முத்தரசன் எதிர்ப்பு
ஆனால் வைகோ, மோடியை பாராட்டி வருகிறார். இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
ஜிஆர் எதிர்ப்பு
இதனிடையே மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணனும் வைகோவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளதாவது:
வைகோவுடன் வேறுபாடு..
ரூபாய் நோட்டு செல்லாது விவகாரத்தில் நாட்டில் 70% மக்கள் மோடியின் நடவடிக்கையை ஆதரிக்கிறார்கள்; 28-ந் தேதி எதிர்க்கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு மக்கள் ஆதரவு இல்லை. இதன் மூலமே மோடி நடவடிக்கை சரியானது என வைகோ கூறியுள்ளார். அவர் கருத்துக்கு முற்றிலும் மாறுபடுகிறேன். வேறுபடுகிறேன். வைகோவின் கருத்து சரியானது அல்ல. நாட்டில் பெரும்பான்மையான மக்கள் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்னர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊடகங்களே சொல்லுகின்றன..
ஊடகங்களே இந்த மக்கள் துயரத்தை வெளிப்படுத்துகின்றன. ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்புக்குப் பின்னர் குஜராத்தில் இயங்கி வந்த 600க்கும் மேற்பட்ட செராமிக் தொழிற்சாலைகளில் 50% மூடப்பட்டுவிட்டன. இதுதான் நாடு முழுவதும் இருக்கிற நிலை. இந்தியாவில் பணமற்ற பரிவர்த்தனை என்பது சாத்தியமே இல்லை.
இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.