ம.ந.கூட்டணிக்கு தேமுதிக வரும்- ஜி.ஆர்; வராவிட்டாலும் நட்டம் இல்லை- முத்தரசன்
சென்னை: மக்கள் நலக் கூட்டணிக்கு தேமுதிக வரும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் மக்கள் நலக் கூட்டணிக்கு தேமுதிக வராவிட்டாலும் நட்டம் எதுவும் இல்லை; யாரையும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கமாட்டோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.
சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக தேமுதிக அறிவித்தது. இந்த அறிவிப்பை மக்கள் நலக் கூட்டணி, பாஜக ஆகியவை உடனே வரவேற்றன.
ஆனால் தேமுதிக தலைமையில் தனி அணி அமைக்கப்படும் என விஜயகாந்த் மனைவி பிரேமலதா அறிவித்ததை இக்கட்சிகள் ரசிக்கவில்லை. பாஜகவும் மக்கள் நலக் கூட்டணியும் தங்கள் கூட்டணிக்கு தேமுதிக வரவேண்டும் என்றே வலியுறுத்தி வருகின்றன.
அதேபோல் விஜயகாந்த் வந்தால் முதல்வர் வேட்பாளராக ஏற்போம் என அறிவித்ததையும் மக்கள் நலக் கூட்டணி கைவிட்டு இப்போது யார் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்க முடியாது; மக்கள் நலக் கூட்டணிக்கு தேமுதிக தலைமை வகிக்க முடியாது; நாங்கள் டேக் ஆப் ஆகிவிட்ட விமானம் என கூறி வருகிறது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன், எங்கள் கூட்டணிக்கு தேமுதிக வரும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
அதே நேரத்தில் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் முத்தரசனோ, எங்கள் அணிக்கு தேமுதிக வராவிட்டாலும் நட்டம் இல்லை. அவர்களை எதிர்பார்த்து நாங்கள் காத்திருக்கவில்லை. தேர்தலுக்கு முன்னரே முதல்வர் வேட்பாளரை அறிவிப்பது தவறான முன்னுதாரணம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.