ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்: திமுகவுக்கு முதல் அடி? ஆதரவு அழைப்பை நிராகரிக்கிறது சிபிஎம்?
ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்ற மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை சிபிஎம் நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது. சிபிஎம் சார்பில் ஆர்கே நகரில் வேட்பாளர் நிறுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை மக்கள் நலக் கூட்டணி கட்சிகள் ஆதரிக்க வேண்டும் என்ற அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பை நிராகரிக்க மார்க்சிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியும் வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ந் தேதி நடைபெற உள்ளது. அதிமுக பிளவுபட்டுள்ள நிலையில் பிற கட்சிகள் எப்படியும் வென்றுவிடலாம் என்ற கனவில் போட்டியிடுவதில் மும்முரம் காட்டுகின்றன.
எம்ஜிஆர்- அம்மா- தீபா பேரவையின் பொதுச்செயலர் தீபா, தேமுதிகவின் வடசென்னை மாவட்ட செயலாளர் மதிவாணன் போட்டியிடுவார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் அதிமுக சார்பாக மாஜி டிஜிபி திலகவதி, நடிகை லதா, டாக்டர் அழகு தமிழ்ச்செல்வி, ஜேசிடி பிரபாகரன் உள்ளிட்டோரில் ஒருவர் போட்டியிட உள்ளனர்.
சசிகலா அதிமுக
சசிகலா அதிமுகவும் நாளை மறுநாள் வேட்பாளரை அறிவிக்க உள்ளது. நாம் தமிழர் கட்சி, பாஜகவும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
ஸ்டாலின் வேண்டுகோள்
திமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதனிடையே சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், இடதுசாரிகளை உள்ளடக்கிய மக்கள் நலக் கூட்டணி கட்சிகள் திமுக வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்.
சிபிஎம் நிராகரிப்பு
இந்த அழைப்பு குறித்து இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டம் பரிசீலிக்க இருக்கிறது. ஆனால் மார்க்சிஸ்ட் கட்சியோ எடுத்த எடுப்பிலேயே இதை நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.
திமுகவுக்கு முதல் அடி
ஆர்.கே.நகர் தொகுதியில் தோற்றாலும் பரவாயில்லை வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்ற முடிவில் இருக்கிறதாம் சி.பி.எம்.. இது ஆர்.கே. நகர் தொகுதியில் எப்படியும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் திமுகவுக்கு முதல் அடியாகவே கருதப்படுகிறது.