சிறுதாவூர் பங்களாவுக்கு வந்த அந்த கண்டெய்னர் லாரியைப் பிடிக்க வேண்டும்.. ஜி.ரா. கோரிக்கை
சென்னை: சிறுதாவூர் பங்களாவுக்கு வந்த அந்த கண்டெய்னர் லாரியைப் பிடித்து சோதனை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறுதாவூர் பங்களாவில் பல ஆயிரம் கோடி பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வைகோ கூறி வருகிறார். அவரது சந்தேகம் உண்மைதானோ என்று நினைக்கும் வகையில், அங்கு மர்மமான முறையில் வாகன நடமாட்டமும் உள்ளது.
இந்த நிலையில் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சில கண்டெய்னர் லாரிகள் முதல்வர் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவுக்கு சென்றுள்ளது. அதில் பணம் கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வருகிறது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கும், காவல்துறை தலைவர் டி.ஜி.பி.க்கும் வைகோ புகார் கொடுத்துள்ளார். ஆனால் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் அந்த கண்டெய்னர் லாரியை தேர்தல் ஆணையமும், காவல்துறையும் சோதனையிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம் என்று ராமகிருஷ்ணன் கூறினார்.