ஜிஎஸ்டி வரி உயர்வு எதிரொலி.. தமிழகம் முழுவதும் பட்டாசு, தீப்பெட்டி ஆலைகள் மூடல்
கோவில்பட்டி: ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவில்பட்டி, சிவகாசி பகுதியில் பட்டாசு தொழிற்சாலைகள், தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டுள்ளன.
கோவில்பட்டியில் இயங்கி வரும் 1000க்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகள் மத்தியரசின் 18சதவீத ஜீ.எஸ்.டி வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்ததினை தொடங்கியுள்ளது. இதனால் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளது மட்டுமின்றி 100 கோடி ரூபாய் மதிப்பிலான பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளது.

மத்தியரசு இன்று முதல் அறிமுகப்படுத்தியுள்ள ஜி.எஸ்.டி வரி விதிப்பில் பகுதி மற்றும் முழுநேர இயந்திர தீப்பெட்டி தொழிலுக்கு 18 சதவீத வரி விதிப்பு செய்துள்ளது. இந்திய அளவில் தீப்பெட்டி உற்பத்தியில் 85 சதவீதம் அளவு தமிழகத்தில் தான் உற்பத்தி செய்யபடுகிறது.
தமிழகத்தில் கோவில்பட்டி, விருதுநகர், சிவகாசி, சங்கரன்கோவில் மற்றும் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் தீப்பெட்டி தொழில் நடைபெற்று வருகிறது. 300க்கும் மேற்பட்ட பகுதி நேர இயந்திர தீப்பெட்டி ஆலைகளும், 20க்கும் மேற்பட்ட முழு நேர இயந்திர தீப்பெட்டி ஆலைகளும், இவற்றை சார்ந்து 3000க்கும் மேற்பட்ட சிறு தீப்பெட்டி ஆலைகளும் இயங்கி வருகிறது.
ஏற்கனவே மூலப்பொருள்களின் விலை உயர்வு, சிறு தொழில் பட்டியலில் இருந்து நீக்கம் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டு வந்த தீப்பெட்டி தொழிலுக்கு மற்றொரு பிரச்சினை மத்திய அரசு தற்போது விதித்துள்ள 18 சதவீத வரி ஜி.எஸ்.டி வரி விதிப்பு உருவெடுத்துள்ளது.
ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும், பகுதி மற்றும் முழுநேர இயந்திர தீப்பெட்டி தொழிலுக்கான வரி விதிப்பில் வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி இன்று முதல் தமிழகம் முழுவதும் தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் காலவரையற்ற போராட்டத்தினை தொடங்கியுள்ளனர். இதனால் கோவில்பட்டி, கயத்தார், விளாத்திகுளம், கழுகுமலை, கடம்பூர், எட்டயபுரம், இளையரசனேந்தல், வானரமுட்டி பகுதியில் உள்ள 1000க்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகள் இன்று முதல் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல் பட்டாசு உற்பத்திக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 750 பெரிய, சிறிய அளவிலான பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாவட்டத்தில் 700 பட்டாசு விற்பனை கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தத்தால் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications