”இனி ஆட்டோ பில்லும் கிரெடிட் கார்டில்”....சென்னையில் விரைவில்
சென்னையில் நம்ம ஆட்டோ என்ற மீட்டர் ஆட்டோ திட்டத்தை அறிமுகப்படுத்திய மன்சூர் அலி கான் தற்போது இந்தியாவின் முதல் கணிணிமயமாக்கப்பட்ட ஆட்டோக்களை அறிமுகம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "முதல் கட்டமாக ஆன் லைன் வசதிகொண்ட பெண்களுக்காக பெண்களே இயக்கும் 25 ஆட்டோக்களும், அனைத்து தரப்பினருக்குமான 75 ஆட்டோக்களும் விரைவில் செயல்முறைக்கு வரவிருக்கின்றன.
இந்த ஆட்டோக்களில் சுழலும் திறன் கொண்ட டேப்லெட் பிசி இணைக்கப்படும். இதன் மூலம் ஆட்டோ வாடகைகளில் தவறு நடக்காமல் கண்காணிக்க முடியும். மேலும் முழுக்க முழுக்க கணிணி மயமாக்கப்பட்ட ஆட்டோ என்பதால் ஆட்டோ கட்டணத்தை மிகத் துல்லியமாகக் கணக்கிட முடியும்.
மேலும்,ஜி.பி.எஸ். கண்காணிப்பு வசதி, 2 ஜி டேட்டா தகவல் தொடர்பு, சிசி டிவி வசதி மற்றும் ஆட்டோ வாடகைக் கட்டணத்தை டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாகவும் செலுத்தக் கூடிய வசதிகள் இந்த ஆட்டோக்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது" என்றார்.