ஒரே மாதத்தில் 3வது பெருமழை.... மீண்டும் மிதக்குது கடலூர்... திசையெங்கும் பெருவெள்ளம்...
சென்னை: ஒரே மாதத்தில் 3வது பெருமழையை எதிர்கொண்ட கடலூர் வெள்ளத்தால் மூழ்கிப் போய்விட்டது. அனைத்து பகுதிகளும் வெள்ளத்தால் மிதந்து கொண்டிருக்கின்றன.
வங்கக்கடலில் உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை கடலூர் அருகே நவம்பர் மாதம் 9-ந் தேதி கரையைக் கடந்தது. இதனால் கடந்த மாதம் 8, 9- ந் தேதிகளில் கனமழையாக கொட்டித் தீர்த்தது. நெய்வேலி பகுதியில் 41 சென்டி மீட்டர் மழை பெய்தது.

இதனால் நெய்வேலி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் பரவனாறு, செங்கால் ஓடை வழியாகச் சென்று கல்குணம், பூதப்பாடி கிராமங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. காட்டாறுகளாகச் சென்ற மழைநீர் விசூரில் பெரும் அழிவை ஏற்படுத்தியது.
பின்னர் நவம்பர் 22, 23-ந் தேதிகளில் மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்தது. இந்த மழை கடலூர் நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஏராளமான குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது.
தற்போது நேற்றும் கனமழை பெய்தது. இப்படி ஒரு மாத காலத்துக்குள் 3 கனமழையை கடலூர் மாவட்டம் சந்தித்துள்ளது.

இதனால் சுமார் 2.50 லட்சம் ஏக்கர் பரப்பிலான அனைத்து விவசாயப் பயிர்களும் நாசமாகிப் போய்விட்டன. கடலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
தற்போது அடுத்த 48 மணிநேரத்துக்கு நிலைமை மேலும் மோசமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் கடலூரின் கதி மிக மோசமாகிவிடும் என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications